நம்பிக்கைதான் ஆகப்பெரிய வாழ்வாதாரம். அதைப் பற்றிக்கொண்டே மனித இனம் எல்லாப் பேரிடர்களையும் தாண்டி பயணித்துக் கொண்டிருக்கிறது. சக மனிதர்களுக்கு அன்பையும் கருணையும் பகிர்ந்தளித்து, நம்பிக்கையூட்டுகிற அக்கறை மனிதர்களை கொண்டாடுவது ஊடகத்துக்கான அறங்களில் ஒன்று. ஆனந்த விகடன் ஒவ்வோராண்டும் அப்படியான மனிதர்களை அடையாளம் கண்டு நம்பிக்கை மனிதர்களாக சமூகத்தின் முன் நிறுத்துகிறது.
பழங்குடிகளின் நல்வாழ்வுக்காக போராடுபவர்கள், மாற்றுத்திறனாளிகளின் உரிமைக்குரலாக ஒலிப்பவர்கள், அதிகார அத்துமீறல்களுக்கு எதிராக களமாடுபவர்கள், திரைக்கலையை களங்கமில்லாமல் மக்களின் இதயத்துக்கு நெருக்கமாக எடுத்துச் சென்றவர்கள், வாய்ப்பற்ற குழந்தைகளின் எதிர்காலத்துக்காக தங்களை ஒப்புக்கொடுத்தவர்கள், தடைகளை உடைத்து விளையாட்டுகளில் உச்சம் தொட்டவர்கள், வணிகம் கலங்காமல் சேவையாக மருத்துவத்தை முன்னெடுத்துச் செல்பவர்கள் என 2025-ம் ஆண்டிலும் மனிதம் காத்தவர்கள் ஏராளம்!
இவர்கள் அனைவரையும் எப்போதும்போல புகழ் வெளிச்சத்தில் நிறுத்துவதன் மூலம் பெருமை கொள்கிறது ஆனந்த விகடன். பிரமாண்டமான மேடையில் டாப்-10 மனிதர்கள், டாப்-10 இளைஞர்கள், பெருந்தமிழர் என இந்த ஆண்டும் சாதனையாளர்களின் கதைகள் அனைத்தும் நம் நெஞ்சுக்கு உரமாகக் காத்திருக்கின்றன. நேரில் கண்டு நெகிழ்ச்சியடைய நீங்கள் தயாரா?
கலர்புல் கலை நிகழ்ச்சிகளுடன் சென்னையில் நடைபெறும் விழாவைக் காண உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். அனுமதி இலவசம்!