விவசாயத்தை விட்டு பலரும் ஒதுங்கும் சூழலில் மண்ணில் தன் எதிர்காலத்தை விதைத்தவர், சென்னையைச் சேர்ந்த அர்ச்சனா ஸ்டாலின். ஐ.டி நிறுவன ஊழியரான இவர், நம்மாழ்வாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இயற்கை விவசாயம் செய்ய திருவள்ளூர் மாவட்டத்தில் இரண்டு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்தார். விளை பொருளுக்கேற்ற விலை கிடைக்காமல் வாடிய விவசாயிகள் அவரை யோசிக்கவைத்தனர். அடுத்த தலைமுறை விவசாயத்தை கைவிடவும் அதுவே காரணம் என்று உணர்ந்தவர், தீர்வைத் தேடினார். `மை ஹார்வெஸ்ட்’ என்ற நிறுவனத்தை தொடங்கி, இயற்கை விவசாயி களின் பொருள்களை சந்தைப்படுத்தி, உரிய லாபத்தை அவர்கள் கையில் கொடுத்தார். இவர் மேல் நம்பிக்கை ஏற்பட, பலரையும் இயற்கை விவசாயத்திற்கு அழைத்து வந்தார். குறிப்பாக, தங்கள் குடும்ப நிலத்தை விற்க நினைத்த இளைஞர்கள் பலர் இவருடன் கைகோத்தனர். விவசாயிக்கான வயது இலக் கணத்தை உடைத்து, 26 முதல் 35 வயது வரையுள்ள 240 இளம் தலைமுறை விவ சாயிகள் பட்டாளத்தை உருவாக்கியிருக்கிறார். தற்போது மாதந்தோறும் 8,000 குடும்பங்களுக்கு நச்சற்ற உணவு விநியோகம் செய்கிறது அர்ச்சனாவின் பசுமைப் படை. விவசாயத்தை யும், விவசாயிகளையும் தலைநிமிரச் செய்யும் அர்ச்சனாவுக்கு... `பசுமைப் பெண்’ விருது வழங்கி பூரிக்கிறது அவள் விகடன்!