பெண்கள் மிக அரிதாகக் காணப்படும் "பாடி பில்டிங்" போட்டியில் தங்கப் பதக்கம் வென் றவர் சங்கீதா. திருப்பத்தூர் மாவட்டம், மேட்டுப் பாளையம் கிராமத்தில் தனது குடிசை வீட்டில், தன் பதின் பருவ பிள்ளைகள் தினேஷ்குமார், நந்தினி மற்றும் வறுமையுடன் வாழ்கிறார். மதுப்பழக்கத்துக்கு அடிமையான கணவர் இறந்துவிட, தோல் ஃபேக்டரி வேலை, மேஸ்திரி வேலை, வீட்டு வேலை, கழிவறை சுத்தம் செய்யும் வேலை எனக் கிடைக்கும் வேலைகளையும் ஓடியோடிப் பார்த்துக் கொண்டிருக்கிறார். உழைப்பால் வலுவேறிப் போயிருந்த தன் தசைகளைப் பார்த்தவருக்கு, பாடி பில்டிங் எண்ணம் தோன்றியிருக்கிறது. ஃபிட்னெஸில் நடிகர் சரத்குமாரை தன் ரோல் மாடலாகச் சொல்லும் சங்கீதா, ஜிம்மில் சேர்ந் திருக்கிறார். ஊரும், உறவும் ஏசியதையெல்லாம் மன உறுதியுடன் கடந்துவிட்டார். ஆனால், ஜிம்முக்குக் கட்ட காசு இல்லை. அவரின் பயிற்சியாளர் குமாரவேல் இலவச பயிற்சி யளித்து இயன்ற உதவிகளைச் செய்ய, 2020-ம் ஆண்டு முதன்முதலாக பாடி பில்டிங் போட்டியில் கலந்துகொண்டார். 2022-ம் ஆண்டு தென்னிந்திய அளவிலான பெண் களுக்கான பாடி பில்டிங் போட்டியில் தங்கம் வென்று தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த சங்கீதாவுக்கு... "சாகச மங்கை" விருது அளித்து உச்சிமுகர்கிறது அவள் விகடன்!