பொதுவாக, குழந்தைகளின் சிறுகை பருக்கைகளை அளாவி சிந்திச் சிதறி வாய்க்குள் வைத்துச் சாப்பிடப் பழகும் மூன்று வயதில், சிலம்பப் பயிற்சி எடுக்கத் தொடங்கி விட்டார் சுபஷெரின். நாகர்கோயிலைச் சேர்ந்த இவரின் பெற்றோர் சிலம்பம் மற்றும் அடிமுறைக்கலைஞர்கள் என்பதால், மீன் குஞ்சு தன் கடலில் துள்ளிக் குதித்து சிலம்பாடி வளர்ந்தது. தன் பெற்றோரை குருவாக ஏற்று சிலம்பத்தை ஆழமாகக் கற்ற சுபஷெரின் ஆறு வயதில் இருந்தே வட்டாரம், மாவட்டம், மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தார். குத்துவரிசை, கம்பு வீச்சு, வேல் கம்பு வீச்சு, மான் கொம்பு, இரட்டைவாள் வீச்சு, சுருள்வாள் வீச்சு, அழிவின் விளிம்பில் இருக்கும் அடிமுறைக் கலை என அனைத்தையும் கற்றுத்தேர்ந்தார். குறிப்பாக, ஆறுமுனைகள் கொண்ட நட்சத்திர தீப்பந்தத்தை இந்தக் குட்டி மத்தாப்பு சர்வ சாதாரணமாகக் கையாளும் லாகவம், ஆச்சர்யம். தமிழனின் பாரம்பர்ய கலையான சிலம்பத்தில் மாநில, தேசிய, உலக அளவி லான போட்டிகளில் தங்கங்களையும் வெள்ளி களையும் அள்ளி வந்துகொண்டிருக்கும் இந்த 15 வயது அதிசயத்துக்கு... "லிட்டில் சாம்பியன்" விருது வழங்கி உளமார வாழ்த்துகிறது அவள் விகடன்!