மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அரசு நடுநிலைப் பள்ளிக்கு ராஜேஸ்வரி தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றபோது, 169 மாணவர்கள் மட்டுமே படித்தனர். அதை 540 ஆக உயர்த்திக்காட்டினார் இந்த குரு. முன்னாள் மாணவர்கள், மற்றும் பலரிடமும் உதவி பெற்று வகுப்பறை கட்டடங்கள், ஸ்மார்ட் வகுப்பறை, கழிப்பறை வசதி, கை கழுவும் இடம் முதல் மாணவர்களுக்குத் தேவை யான பேக், பாட்டில், குடை உள்ளிட்ட பொருள்கள் வரை பெற்றுத் தந்தார். தனியார் மருத்துவமனை உதவியுடன் பள்ளியில் இவர் கண் சிகிச்சை முகாம் நடத்த, பார்வைக்குறைபாடு கொண்ட மாணவர் களுக்குக் கண்ணாடி கிடைத்தது. தங்கள் மாணவர்கள் பலவிதமான போட்டிகளிலும் பங்கெடுக்க ஊக்கமும், வழிகாட்டலும் இவர் கொடுக்க, அவர்கள் மாவட்ட, மாநில, தேசிய அளவில் முதலிடம் பிடித்துப் பல பரிசுகளை கொய்து வந்தனர் தங்கள் பள்ளிக்கு. இந்த மனுஷியின் நிகரில்லாத ஈடுபாட்டாலும் முயற்சியாலும், 2021-22 கல்வியாண்டில் மாநில அளவில் மிகச் சிறந்த பள்ளியாகக் குத்தாலம் அரசு நடுநிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டது. இப்படியொரு தலைமை ஆசிரியர் வேண்டும் எனப் பல அரசுப் பள்ளிகளை ஏங்க வைக்கும் இந்த ஆல மரத்துக்கு... `கல்வித் தாரகை’ விருது வழங்கி மனம் நிறைகிறது அவள் விகடன்!