தென்னிந்திய சினிமாவில் ஹோம்லி ஹீரோயினாகக் கொடிகட்டிப்பறந்தவர், 'புன்னகை அரசி' கே.ஆர்.விஜயா. பால்யத்திலேயே மேடை நாடகங்களில் நடித்தவர், 15 வயதில் 'கற்பகம்' திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே புகழின் உச்சிக்குச் சென்றார். சிவாஜியுடன் 40-க்கும் மேற்பட்ட படங்கள், எம்.ஜி.ஆருடன் 10-க்கும் அதிகமான படங்கள் என 1960-களிலிருந்து கோலோச்சினார். என்.டி.ராம ராவ், நாகேஸ்வர ராவ், விஷ்ணுவர்தன், பிரேம் நசீர் என ஜோடி சேர்ந்து மொத்த தென்னிந்திய சினிமாவிலும் வெற்றிகளைக் குவித்தார். நடிப்பு, தமிழ் உச்சரிப்பு, நடனம் என அனைத்திலும் மிளிர்ந்தவரை, நம்ம வீட்டுப் பெண்ணாக சிம்மாசனமிட்டு அமரவைத்தனர் ரசிகர்கள். 'சரஸ்வதி சபதத்’தில் ரெளத்திரம், 'ஊட்டி வரை உறவி’ல் நகைச்சுவை, 'இரு மலர்களி’ல் காதல்ரசம், 'குறத்திமகனி’ல் தாய்ப்பாசம் என அசத்தினார். அம்மன் வேடங்களுக்கு எழுதிவைக்கப்பட்டது இவரது பெயர். 500-க்கும் மேற்பட்ட படங்களுடன் திரைத்துறையில் 70 ஆண்டுகளைக் கடந்திருக்கும் நடிப்புப் பேரரசிக்கு, 'கலை நாயகி' விருது வழங்கிப் பெருமிதம் கொள்கிறது அவள் விகடன்!