நம்பிக்கைதான் இந்த உலகத்தை இயக்கிக்கொண்டிருக்கிறது. பேரிடர்களை, பெருந்துயர்களையெல்லாம் கடந்து இந்த பூமிப்பந்து சுழல்வதற்கு மிகப்பெரும் ஆக்கசக்தியாக இருப்பது நம்பிக்கைதான். அந்த நம்பிக்கையை தங்கள் வாழ்வின் வழியாகவும் செயலின் வழியாகவும் தூவிக்கொண்டேயிருக்கிற தமிழ் மண்ணின் மனிதர்களை ஒவ்வோராண்டும் அடையாளம் கண்டு, பிரமாண்டமான மேடைகளில் டாப்-10 மனிதர்கள், டாப்-10 இளைஞர்கள் விருது வழங்கி கௌரவித்து வருகிறது ஆனந்த விகடன்.
பேரிடர் காலங்களில் முகமறியா மனிதர்களுக்குக் கரம் கொடுத்த தன்னார்வலர்கள், அதிகாரத்துக்கு அஞ்சாமல் அறத்தின் பக்கம் நிற்கும் அரசு ஊழியர்கள், நிலத்தையும் நீரையும் காக்க களத்தில் நின்று செயலாற்றும் சூழலியல் காவலர்கள், மனித மாண்பையும் உரிமையையும் காக்கப் போராடும் செயற்பாட்டாளர்கள் என்று தமிழ் சமூகத்தின் பெருமிதமாக வெளிச்சம் தேடாமல் இயங்கிக்கொண்டிருக்கும் பலர் ஆனந்த விகடனின் நம்பிக்கை விருதுகளைப் பெற்றிருக்கிறார்கள்.
அந்த வரிசையில் 2022-ம் ஆண்டில் டாப் 10 நம்பிக்கைகளாக இருந்து மனிதம் காத்த இளைஞர்களையும் மனிதர்களையும் அங்கீகரிக்கும் நேரம் இது. பல லட்சம் வாசகர்களின் அன்பிலும் அபிமானத்திலும் நூற்றாண்டை நெருங்கிவரும் ஆனந்த விகடனின் நம்பிக்கை விருதுகளைப் பெறப்போகும் இளைஞர்கள், மனிதர்கள் யார் யார்?
நிகழ்ச்சிக்கான இலவச டிக்கெட்டுகளைப் பெற இங்கே க்ளிக் செய்யவும்