கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பென திரைக்கலையின் அகம்புறங்கள் அனைத்திலும் தடம்பதிக்கத் துடிக்கும் பன்முக இளைஞன். ‘ஜெய்பீம்' ராஜாக்கண்ணு, ‘காலா' லெனின் என ஒவ்வொரு பாத்திரத்தையும் தனக்குள் பொருத்தி வாழ்ந்துகாட்டுவதில் கவனம் பெறுகிறார். உதவி இயக்குநர், கதாசிரியர், நடிகரென அவர் உழைப்பைக் கொட்டிய ‘விக்ரம் வேதா' தனித்து இவரை அடையாளம் காட்டியது. அந்த இடத்தை எட்டிப்பிடிக்க மணிகண்டன் ஓடிய ஓட்டமும் ஏறிய படிகளும் கொஞ்சமல்ல. சினிமாவின் இரும்புக் கதவுகளைத் தொடர்ந்து தட்டிக்கொண்டே இருந்தால் ஒரு நாள் அந்தக் கதவுகள் திறந்து தன்னை அரவணைத்துக்கொள்ளும் என்ற நம்பிக்கைக் கனவோடு காத்திருந்த இந்த எதார்த்த கலைஞனைக் கைகுலுக்கி அங்கீகரித்திருக்கிறது சினிமா. ஆர்.ஜே, மிமிக்ரி, டப்பிங் எனக் கிடைத்த இடங்களிலெல்லாம் தன்னை நிரூபிக்கப் பேசிக்கொண்டிருந்த மணிகண்டனைப் பற்றி இப்போது தமிழகம் பேசுகிறது. சினிமாவே எதிர்காலமெனக் கருதி வாழ்க்கையை ஒப்புக்கொடுத்த அத்தனை இளைஞர்களுக்கும் மணிகண்டனின் வெற்றி தந்திருப்பது நம்பிக்கைப் பேரொளி!