இந்திய கிரிக்கெட்டின் இன்றைய சென்சேஷன் ஷாரூக். சையது முஷ்தாக் அலி டி-20 தொடரின் கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்துத் தமிழ்நாட்டின் கையில் வெற்றிக்கோப்பையைப் பரிசளித்திருக்கிறார் இந்தச் சென்னை இளைஞர். 24 வயது வரை பிரதிபலன் பாராமல் உழைத்தவருக்கு, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஃப்ரீ ஹிட்களாகப் பரிசளித்துக்கொண்டிருக்கிறது வாழ்க்கை. அதையெல்லாம் ஒன்று விடாமல் அவுட் ஆஃப் தி ஸ்டேடியம் அடித்துக்கொண்டிருக்கிறார் ஷாரூக். இவர் களத்தில் நின்றாலே, கேலரியில் ஃபீல்டரை நிறுத்தலாமா என்று யோசிக்கின்றன எதிரணிகள். ஆனால், தான் ஹிட்டர் மட்டுமல்ல, நல்ல ஃபினிஷர் என்பதையும் இந்த ஆண்டு நிரூபித்துவிட்டார். இந்திய அணியின் மிடில் ஆர்டரை ஆட்சி செய்யும் வல்லமை கொண்ட இந்த நம்பிக்கைத்தம்பிக்கு, புதிய ஆண்டு சர்வதேச வாய்ப்புகளைக் கொடுக்கலாம். அடுத்து, ‘ஐ.பி.எல் ஏலத்தில், மிக அதிக தொகைக்குப் போனவர்’ என்ற சாதனையும் சாத்தியமாகலாம்.