12 வயதில் எல்லோருக்குள்ளும் ஒரு கனவு இருக்கும். திருவண்ணாமலையைச் சேர்ந்த வினிஷா உமாஷங்கரின் கனவு அவரை 2021 ஐக்கிய நாடுகளின் கால நிலை மாநாட்டின் மேடைவரை அழைத்துச் சென்றிருக்கிறது. தன் தாயாருடன் இஸ்திரிக் கடைக்குச் செல்லும்போது, அந்தப் பெட்டியில் இருக்கும் கரியையும், அது வெளியிடும் வாயுக்கள் குறித்தும் சிந்தித்திருக்கிறார். ஆறு மாத கால உழைப்பில், சூரியத் தட்டுக்களால் இயங்கும் இஸ்திரிப் பெட்டியை உருவாக்கியிருக்கிறார். ஐந்து மணி நேர நேரடி சூரிய வெப்பத்தின் மூலம், இப்பெட்டியால் ஆறு மணி நேரம் தொடர்ச்சியாக இயங்க முடியும். அத்தோடு நில்லாமல், சூரிய சக்தியை மின்சாரமாகச் சேகரிக்கும் பேட்டரியைக் கொண்டு ஒரு மொபைல் சார்ஜிங் போர்ட் என நவீன ரக பசுமை இஸ்திரி வாகனத்தை வடிவமைக்கிறார் வினிஷா. தன்னை ஒரு சூழலியலாளர், தொழிலதிபர் என அழைத்துக்கொள்ளும் வினிஷாவைப் போல, புவி வெப்பமயமாதலிலிருந்து உலகத்தைக் காக்க நமக்குத் தேவை நிறைய வினிஷாக்கள்.