எளிய மனிதர்கள் தொடக்கம் தொட்டே மிரட்சியோடு அணுகிய கனவுத் தொழிற்சாலைக்குள், உப்புப்படிந்த ஈரத்திற்கும், வெக்கையின் காய்ந்த வாசனைக்கும் இடமிருக்கிறது எனக் காட்டிய அசல் படைப்பாளி. நிலத்தைத் தோண்டிப் பாயும் வேர்களைப் போல இறுகிப்போன மனித மனங்களை இந்த மதுரைக்காரர் அகழ்ந்து தேட, கிடைத்தது `கூழாங்கல்.' வெள்ளித்திரையில் பிரதிநிதித்துவம் சுலபமாகக் கிடைத்திடாத வெள்ளந்தி மனிதர்களை, வரைமுறைக்குள் அடங்காத முயற்சிகளுக்குத் தோள் கொடுத்து நின்ற நண்பர்களைக் கொண்டு வினோத் உணர்த்திய பேருண்மை - `ஆஸ்கர் தூரமில்லை.' `சினிமாவில் எல்லாருக்கும் இடமிருக்கிறது' என்பதையும் `நிலத்தில் காலூன்றி மண்ணைப் பேசுவதுதான் உலக சினிமா' என்பதையும் அழுத்தந்திருத்தமாய்த் தன் முத்திரைபட எழுதி வினோத் போட்டுக் காட்டியிருப்பது நம்பிக்கைப் பாதை. `சொல்வதற்கு ஆயிரங்கதைகள் இருக்கின்றன, கேட்பதற்குத் தேவை ஒரு திறந்த மனம் மட்டுமே' எனத் தன் முதல் படத்திலேயே மண்ணுக்கும் மனிதர்களுக்கும் இடையே ஓர் உரையாடலைத் தொடங்கிவைத்திருக்கும் இயக்குநர் வினோத் ராஜ், தமிழ்சினிமாவின் வெளிச்சக்கீற்று.