அம்பாசமுத்திரம் அருகேயிருக்கும் வாகைக்குளத்தில் பிறந்த ஒரு தமிழ்ப்பெண், இந்திய அறிவியலை ஆட்சிசெய்யும் பெருமிதத் தருணம் இது. தேசமெங்கும் அறிவியல் ஆராய்ச்சிகளை வழிநடத்தும் சி.எஸ்.ஐ.ஆர் (இந்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழுமம்) தலைமை இயக்குநராகவும், டி.எஸ்.ஐ.ஆர் எனப்படும் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சித் துறையின் செயலாளராகவும் இருக்கிற கலைச்செல்வி, இந்த உயரத்தை எட்டிப்பிடித்ததன் பின்னணியில் இருக்கிறது இணையற்ற உழைப்பும் அறிவியல் தாகமும். 80 ஆண்டுக்கால சி.எஸ்.ஐ.ஆரின் வரலாற்றில் தலைமை பீடத்தை எட்டிப் பிடித்திருக்கும் முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளவர் கலைச்செல்வி. லித்தியம் பேட்டரி தொடர்பான இவரின் ஆய்வுகள், இந்தியாவின் எதிர்கால எலெக்ட்ரிக் வாகனக் கனவுகளுக்கு உயிர்கொடுப்பவை.