2003-ம் ஆண்டு பணியில் இணைந்த 5,500-க்கும் மேற்பட்ட காவலர்கள், தங்களுக்குள் தகவல் பரிமாற்றத்துக்காக ஒருங்கிணைத்த குழு, இப்போது காவலர்களின் துயர் துடைக்கும் ‘காவலர் உதவும் கரங்கள் 2003 குழு' அமைப்பாக மாறியிருப்பது காலம் செய்த நல்மாற்றம். தங்களோடு பணியில் இணைந்த நண்பர்கள் உயிரிழந்தாலோ, கல்வி, மருத்துவ உதவிகள் தேவைப்பட்டாலோ உடனடியாகக் கைகொடுக்கிறது இந்தக் குழு. அரசுப் பணிப்பலன்களை வழங்குவதற்கு முன்பாகவே இவர்கள் திரட்டித் தருகிற பெரும் தொகை, நிர்க்கதியாக நிற்கும் குடும்பங்களுக்கு இழப்பின் வலியாற்றி, வாழும் நம்பிக்கையை வழங்குகிறது. இதுவரை, உயிரிழந்த 46 காவலர்களின் குடும்பங்களுக்கு 10 கோடி ரூபாய்க்கும் மேலாக நிதிதிரட்டித் தந்திருக்கிறது இந்தக் குழு. இவர்களை முன்மாதிரியாகக் கொண்டு காவல்துறையில் பல நற்பணிக்குழுக்கள் உருவாகியிருப்பதும் போற்றத்தகுந்த நல்மாற்றம்.