திருநர்களின் உணர்வுகளையும் உளவியலையும் உலகம் புரிந்துகொள்ளத் தொடங்கியிருக்கும் நற்தருணம் இது. தவழ்ந்தெழுந்து நடக்கப்பழகும் அவர்களைப் பற்றித்தூக்கிவிட ஆயிரமாயிரம் கரங்கள் தேவையாக இருக்கின்றன. திருநர் சமூகத்துக்குள்ளாகவே அப்படியொரு பரிவின் கரமாக உருவாகியிருக்கிறார் செஞ்சியைச் சேர்ந்த மர்லிமா முரளிதரன். கால் நூற்றாண்டுக் காலமாக தமிழகத்தின் வடமாவட்டப் பகுதியில் வெற்றிகரமான கட்டடப் பொறியாளராகக் காலூன்றி நிற்கும் மர்லிமா, நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு முதலாளியாக உயர்ந்திருக்கிறார். தன்னைப்போல பிற திருநர்களும் பொருளாதாரத் தற்சார்பு பெறுவதற்காக மர்லிமா எடுக்கிற முன்முயற்சிகள் பலரது வாழ்க்கையை மாற்றியிருக்கின்றன. மர்லிமாவின் அரவணைப்பில் படித்த பல திருநர்கள் தமிழகமெங்கும் பணியாற்றுகிறார்கள். அவமானங்கள், புறக்கணிப்புகள், உடல் தொந்தரவுகளென திருநர்களை முடக்கிப்போடும் எல்லா இடர்களையும் தூரத் தள்ளிவிட்டு, வெற்றிகரமான தொழில்முனைவோராக வளர்த்ததோடு, விளிம்பில் தவிக்கும் மற்றவர்களையும் தடம்புரளவிடாமல் வளர்த்தெடுத்த மர்லிமாவின் அக்கறை, திருநர் சமூகத்துக்குத் தருகிறது பெரும் நம்பிக்கை.