பழங்குடிகள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக தமிழகத்தின் எந்த மூலையில் வன்முறைகள் நடந்தாலும் தானே போய் முன்னிற்பவர் மோகன். தாமதங்கள், பிறழ் சாட்சிகள், ஒத்துழைப்பின்மை, சாதிவெறி அச்சுறுத்தல்கள், அலைச்சல்கள் என மூன்றாண்டுக் காலம் கடும் இன்னல்களைக் கடந்து கோகுல்ராஜ் ஆணவக்கொலைக் குற்றவாளிகளுக்கு மோகன் வாங்கித்தந்த தண்டனை, நீதிக்கு நியாயம் சேர்த்தது. மலக்குழியை சுத்தம் செய்யும்போது உயிரிழந்த தொழிலாளருக்கு ‘மது அருந்தியிருந்ததால் இழப்பீடு தரமுடியாது’ என்று அரசு மறுத்தபோது, ‘மலக்குழியை மனிதர்கள் சுத்தம் செய்யக்கூடாது, அப்படி சுத்தம் செய்யவைத்தால் மது அருந்தாமல் செய்யமுடியாது’ என்று வாதிட்டு இழப்பீடு பெற்றுத் தந்தவர். இந்தியா முழுவதும் மனித உரிமை நீதிமன்றங்கள் உருவாகக் காரணமாக இருந்த மோகன், கோவை குண்டுவெடிப்பு வழக்கு, போலீஸ்காரர் செல்வராஜ் கொலை வழக்குகளிலும் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்றார். குரலற்ற மனிதர்களின் போர்க்குரலாக ஒலிக்கிற ப.பா.மோகன், நீதியை வேண்டும் எளியவர்களுக்கு நன்னம்பிக்கை முனை.