வகுப்பறைகள் குழந்தைகளுக்கானவை. அவர்களின் உயரத்துக்குக் கீழே இறங்கிச் சிரித்தும் சிரிக்க வைத்தும் சொல்லிக்கொடுக்கிற ஆசிரியர்களே காலத்தில் நிலைத்திருப்பார்கள். ராமநாதபுரம் மாவட்டம், கீழாம்பல் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியின் ஆசிரியர் ராமச்சந்திரன், குழந்தைகளை வசீகரித்து, கற்றலை ருசியாக்குகிறார். சரிக்குச்சமமாகத் தரையில் அமர்ந்து, குழந்தைகளின் தனித்திறன் அறிந்து கற்பிக்கும் ராமச்சந்திரன், குடியரசுத்தலைவரிடம் நல்லாசிரியர் விருதுபெற்றபோதும் பள்ளிச்சீருடை அணிந்துசென்று தேசத்தின் கவனம் ஈர்த்தார். பாடப்புத்தகங்களோடு, இசை, சிலம்பம், கணினிப்பயிற்சியெனத் தனித்திறன்களையும் வளர்த்தெடுக்கும் இவரின் நற்பணிகளுக்குப் பின்னால் நின்று ஊக்குவிக்கிறது ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம். இருப்போருக்கும் இல்லாதோருக்குமான கல்விப் பாகுபாடு விரிந்துவரும் காலத்தில் கிராமப்புற அரசுப்பள்ளி மாணவர்களை இதயத்தில் ஏந்திக்கொள்ளும் ராமச்சந்திரன் போன்ற நல்லாசிரியர்கள், ஞானத்தந்தைகள்!