தானுயர்ந்து, தன்னைச் சூழ்ந்திருப்போரையும் கைதூக்கிவிடுபவரையே இந்த உலகம் மாமனிதரெனக் கொண்டாடுகிறது. தென்காசிக்குப் பக்கமுள்ள ராயகிரி என்ற குக்கிராமத்தில் பிறந்த செந்தில்குமார் அப்படியொரு மாமனிதர். திருநெல்வேலி அரசுப் பொறியியல் கல்லூரியில் படித்த செந்தில், இன்று இந்தியாவின் டாப் ரேங்கிங் மென்பொருள் நிறுவனமொன்றின் தலைவர். மென்பொருள் துறைக்குப் பொருத்தமற்றவர்களென நிராகரிக்கப்படும் கிராமப்புற மாணவர்களைத் தேடிப்பிடித்து, உதவித்தொகை தந்து பயிற்சியளித்துத் தன் நிறுவனத்தில் பணியளிப்பதோடு, அவர்களின் தலைமைத்துவத்தையும் வளர்த்தெடுக்கிறார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மென்பொறியாளர்களை உருவாக்கியிருக்கிறது, இவரின் வழிகாட்டுதல். மும்பையைத் தலைமையிடமாகக்கொண்டு இயங்கும் இந்த 50 வயது ‘இளைஞரின்’ நிறுவனம், 300க்கும் மேற்பட்ட பெருநிறுவனங்களுக்கு சேவையாற்றுகிறது. பெற்றோரின் மறைவுக்குப் பிறகு தன் கிராமத்திலிருக்கும் வீட்டையே அலுவலகமாக மாற்றி, சுற்றுப்புற கிராமங்களின் பட்டதாரிகளுக்குப் பயிற்சியளித்து உலகத்தின் பல நகரங்களிலிருக்கும் தன் அலுவலகங்களுக்கு அனுப்புகிறார். தயக்கத்தோடு கிராமப்புறங்களுக்குள் முடங்கிக்கிடக்கும் லட்சோப லட்சம் இளைஞர்களுக்கு நம்பிக்கை வெளிச்சம் தருகிறார் செந்தில்குமார்.