ஒரு சாமானியர் நினைத்தால் பெரிதாக எதை மாற்றிவிடமுடியும்? ஓர் அரசு மருத்துவமனையை அதிநவீனமாக மேம்படுத்தலாம். செயற்கைக் கருத்தரிப்பு மையங்களின் கட்டணக்கொள்ளையைத் தடுக்கலாம். மருத்துவத் தவறுகளால் பாதிக்கப்பட்டுத் தவிக்கும் அப்பாவிகளுக்கு இழப்பீட்டுத்தொகை பெற்றுத்தரலாம் என்ற சாத்தியங்களின் சாட்சியம்தான் மதுரையைச் சேர்ந்த வெரோணிக்கா மேரி என்ற பெயர். தகவல் உரிமைச் சட்டம் என்ற ஆயுதத்தைக் கையிலேந்தி ஊழல்வாதிகளுக்கும் ஜனநாயக எதிரிகளுக்கும் எதிராக ஒற்றைப் பெண்ணாகக் களத்தில் நிற்கிறார். ஆயிரத்தைத் தாண்டும் ஆர்.டி.ஐ மனுக்கள், அவற்றில் பெற்ற ஆதாரங்களைக் கொண்டு 22 பொதுநல வழக்குகள் என வியக்க வைக்கிறது வெரேணிக்காவின் செயல்வேகம். வெரோணிக்கா நடத்திய சுகாதார உரிமைப் போராட்டத்தால்தான் லட்சோப லட்சம் ஏழைகளுக்கு உயிர்நம்பிக்கையாக இருக்கும் அரசு மருத்துவமனைகளில் வெண்டிலேட்டரும் அவசரக் கால உயிர்காக்கும் மருத்துவக் கருவிகளும் வந்தன. மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிசு இறப்பு அதிகரிப்பதை நீதிமன்றத்துக்குச் சுட்டிக்காட்டி, 20 கோடி செலவில் அதிநவீன மருத்துவப்பிரிவு உருவாகக் காரணமாக இருந்ததும் வெரோணிக்காதான். எந்தப் பின்புலமும் இல்லாமல், மிரட்டல் உருட்டல்களுக்கு அஞ்சாமல் எளிய மக்களின் நலனுக்காகக் களத்தில் நிற்கும் வெரோணிக்கா, வணங்கத்தகுந்த சிங்கப்பெண்!