மதுரை, கொட்டாம்பட்டிக்கு அருகேயுள்ள கம்பூர் என்ற குட்டி கிராமத்தின் இளைஞர்கள், ஒருங்கிணைந்து நின்று இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்கள். ஒரு நாடாளுமன்றத்தின் வல்லமைமிக்க கிராம சபையை முறைப்படுத்தி, பிற ஊர்க்காரர்களும் வந்து கற்குமிடமாக மாற்றியிருக்கிறார்கள். லஞ்சமற்ற தேர்தல், ஊழலற்ற நிர்வாகம் என வியப்பூட்டும் வெளிப்படை நிர்வாகம் நடக்கிறது கம்பூரில். ஒவ்வொரு தெருவுக்கும் தனித்தனியாக இயங்கும் வாட்ஸப் குழுக்கள், ஊர்ச்செய்திகள், அரசுத் திட்டங்கள், போட்டித் தேர்வு, வேலைவாய்ப்பு அறிவிப்புகள் என 24 மணி நேரமும் விழிப்புடன் இயங்குகின்றன. வாரம்தோறும் செயற்பாட்டாளர்களை விருந்தினர்களாக அழைத்து ஊர்க்கூட்டத்தில் பேசவைப்பது, ஊருக்குப் பிரச்னை வரும்போது கட்டுப்பாடு குலையாமல் போராடுவது என இந்த இளைஞர்களின் ஒழுங்கும் கண்ணியமும் வியப்பூட்டுகிறது. சாதி, மத, பாலின வேறுபாடின்றிக் கரம் கோத்துத் தங்கள் கிராமத்தை வழிநடத்தும் கம்பூர் கிராமத்தின் முன்மாதிரி இளைஞர்களுக்கு ராயல் சல்யூட்.