ஹெச்.ஐ.வி-க்குத் தன் பெற்றோரை அடுத்தடுத்து பறிகொடுத்துத் தவித்து நின்றபோது கிருஷ்ணவேணிக்கு வயது 12. ‘நாம் மட்டும் மருத்துவராக இருந்திருந்தால் இவர்களைக் காப்பாற்றியிருக்கலாமே’ என்ற கண்ணீர்ச் சிந்தனையில் துளிர்த்தது, மருத்துவராகும் கனவு. உணவுக்கும் உடைக்குமே தடுமாற்றமாக இருந்த நேரத்தில், தங்கையின் கனவுக்காகத் தன் படிப்பை நிறுத்திவிட்டு 14 வயதிலேயே உழைக்கப் போனார், கிருஷ்ணவேணியின் அண்ணன். கனவை, காண்பதோடு நிறுத்திவிடாமல் நீக்கமற உழைத்த கிருஷ்ணவேணிக்கு 0.5 மதிப்பெண்ணில் அரசு மருத்துவக் கல்லூரி கைவிட்டுப் போனது. நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் அரவணைக்க, கனவு நனவானது. படிப்பு முடிந்ததுமே ராணுவ மருத்துவராகத் தன்னை இணைத்துக்கொண்டவர் இன்று மேஜர் கிருஷ்ணவேணி ஆகியிருக்கிறார். ஆதரவற்ற குழந்தைகளின் கல்விச் செலவேற்பது, கிராமம்தோறும் ஹெச்.ஐ.வி, புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்களை நடத்துவது என சத்தமில்லாமல் சமூகத்துக்குப் பங்களித்துக்கொண்டிருக்கிற கிருஷ்ணவேணியைப் பாராட்டுகிறது ஆனந்த விகடன்.