கீதாரிகள், ‘வரப்பே தலையணை, வயற்காடே பஞ்சு மெத்தை’ என அரை நாடோடிகளாக வாழும் முல்லை நிலத்துப் பூர்வகுடிகள். வெயிலிலும் மழையிலும் உழன்று இயற்கையின் போக்கில் வாழும் இந்த மக்களின் வாழ்க்கைப்பாடு துயரங்களாலானது. அரசுப் பதிவேடுகளின் எந்தப்பக்கங்களிலும் இடம்பெறாமல், அடையாளமின்றி வாழும் கீதாரிகளுக்காக எழும் முதல் உரிமைக்குரல் பெரி. கபிலனுடையது. தமிழ்த்தொல்குடியான கீதாரிகளுக்கு சமூக மரியாதை ஏற்படுத்தவும், மேய்ச்சல் தொழிலை அங்கீகரித்து முறைப்படுத்தவும் கபிலன் தொடங்கியிருக்கும் ‘தொழுவம்’ அமைப்பு பல திட்டங்களை முன்னெடுக்கிறது. தமிழகமெங்கும் சிதறிக்கிடக்கும் கீதாரிகளை ஒருங்கிணைத்து, மாட்டுக்கிடையை நிறுவனமயப்படுத்துவது, கால்நடைப் பொருள்களை மேம்படுத்திச் சந்தைப்படுத்துவதென இந்தப் பேராசிரியர் நிகழ்த்தியிருக்கும் மாற்றங்கள் அசாத்தியமானவை. ஒடுங்கிக்கிடக்கும் ஓர் எளிய சமூகத்தைத் தட்டியெழுப்பி விழிப்புணர்வூட்டும் கபிலனுக்குக் கைநிறைய பூங்கொத்துகள்!