பார்வைச்சவால் கொண்டவர்கள், பிறரின் பார்வையைப் பற்றிக்கொண்டே இயங்க வேண்டும். தொன்றுதொட்ட அந்தத் துயரத்தைத் தொழில்நுட்பம் கொண்டு துடைத்திருக்கிறார் ரகுராமன். இசையும் மொழியும் மட்டுமே பார்வையற்றவர்களுக்கு சாத்தியப்படும் என்ற கற்பிதத்தை உடைத்து, அறிவியலும் தொழில்நுட்பமும்கூட அவர்களுக்குச் சாத்தியமாகும் என்று மெய்ப்பித்ததில் இருக்கிறது ரகுராமனின் வாழ்நாள் உழைப்பு. பல நல்லிதயங்களின் உதவியோடு இவர் நடத்தும் பயிற்சிக்கூடத்தில் தொழில்நுட்பம் படித்து, 90க்கும் மேற்பட்ட பார்வைச்சவால் கொண்ட இளைஞர்கள் பன்னாட்டு நிறுவனங்களில் பணிவாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். பரிதாபத்தை உதறித்தள்ளிவிட்டு, தகுதியை வளர்த்துக்கொள்ளும் மனோபாவத்தை வடிவமைக்கும் இந்த நந்தனம் அரசுக்கல்லூரி உதவிப்பேராசிரியர், திரைவாசிப்பான் மூலம் எவரின் உதவியுமின்றி வாசிக்கவும் எழுதவும், தன் வாழ்க்கையைப் பாடமாக்கி அடுத்த தலைமுறைக்குப் பயிற்றுவிக்கிறார். ரோட்டரி கிளப் உதவியோடு கிண்டியில் இவர் நடத்தும் தொழில்நுட்பப் பயிலகம், நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் வாழ்க்கையை வெளிச்சமாக்கியிருக்கிறது. அரசுப்பணித் தேர்வுகளை எதிர்கொள்ளும் தைரியத்தையும் நம்பிக்கையையும் வளர்ப்பது, அணுகுதலுக்கேற்றவாறு மின்னூல்களை உருவாக்குவதென தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்து இயங்கும் இந்தப் பேராசிரியரைப் போற்றிப் பாராட்டுகிறது ஆனந்த விகடன்.