பாலினப் பாகுபாடு, உருவக்கேலி, உழைப்புச் சுரண்டல், பாலியல் வன்முறைகளுக்கு எதிராக உரத்து ஒலிக்கிறது திலகவதியின் குரல். சமூகம், சட்டம், பாலின அரசியல் குறித்து அழுத்தமான விவாதங்களை உருவாக்கும் திலகவதி, இந்தியா முழுவதும் பயணித்து பெண்களுக்குத் தற்காப்புப் பயிற்சியளிக்கிறார். குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்காக வழக்காடுகிறார். இவரது களப்போராட்டங்களும் சமூக ஊடகங்களில் எழுப்புகிற விவாதங்களும் இளையோர் மத்தியில் அனலாகப் பரவுகின்றன. தான் எதிர்கொள்ளும் புறக்கணிப்புகளையும் அவமானங்களையும் வன்முறைகளையும் அவ்விடத்திலேயே குரலெழுப்பி எதிர்த்து அம்பலப்படுத்தும் திலகவதி, இருளர்களுக்காகவும் சென்னையின் குடியேற்றப் பகுதிகளில் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகும் அபலைப் பெண்களுக்காகவும் தொடர்ந்து பேசுகிறார். பொறியியல், சட்டம், உளவியலென தன்னைக் கல்வியால் தகவமைத்துக்கொண்டு தினமும் சக பெண்களுக்காக நியாயம் கோரிப் பயணித்துக்கொண்டேயிருக்கிற இந்த ஆச்சர்ய மனுஷியின் கரம்பற்றிப் பாராட்டுகிறது ஆனந்த விகடன்.