அன்பான குடும்பத்தில் அமைதியாக வாழ்ந்த அனிதாவை திடீரென பாதித்தது ‘கிகுச்சி’ எனும் அரியவகை நோய். ‘இது புற்றுநோய்க்கு முந்தையநிலை’ என்று கண்டுசொன்ன மருத்துவர்களுக்கு சிகிச்சை என்னவென்று தெரியவில்லை. கடும் காய்ச்சல், பார்வைக்குறைவு, உயிரை வாட்டும் வலி என நரகவேதனையை அனுபவித்த அனிதாவுக்கு மருந்தாக இருந்தது கேமரா. வலியிலிருந்து மனதின் கவனத்தைத் திருப்பி, புகைப்படங்கள் எடுக்கத் தொடங்கியவர், கூடவே பெண்களுக்கு புற்றுநோய் விழிப்புணர்வும் ஊட்டத் தொடங்கினார். நல்மனம் படைத்த மனிதர்களை ஒருங்கிணைத்து, பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கும் உதவுகிறார். புற்றுநோயால் முடங்கிய இளைஞர்களுக்குப் புகைப்படக்கலை கற்றுத்தந்து வாழும் நம்பிக்கையை உருவாக்குகிறார். நோய் தாக்கி இறந்தோரின் குடும்பங்களுக்குக் கரம் கொடுத்து, குழந்தைகளின் எதிர்காலம் காக்கிறார். நாளுக்கு நாள் தீவிரமாகும் நோய் உடலையும் மனதையும் வருத்துவதைப் பொருட்படுத்தாது, பிறரின் கண்ணீரைத் துடைக்கும் இந்த அற்புத மனுஷியை உச்சிமுகர்கிறது ஆனந்தவிகடன்.