எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றிக்கொண்டிருந்த மனோரமாவை இரண்டு குழந்தைகளின் அழுகுரல் உலுக்கியது. ஹெச்.ஐ.வி. தொற்றுள்ள அக்குழந்தைகள் பிழைக்கமாட்டார்கள் என மருத்துவர்கள் கைவிட, உறவுகள் ஒதுங்கிக்கொண்டார்கள். ஆணும் பெண்ணுமான அக்குழந்தைகளைத் தம் மக்களாகத் தத்தெடுத்துக்கொண்ட மனோரமா, கண்ணும் கருத்துமாக வளர்த்தார். அந்த அன்பு, பெண் குழந்தையை 16 வயது வரை வாழச்செய்தது. ஆண் குழந்தைக்கு இன்று இயல்பான வாழ்க்கையை அளித்திருக்கிறது. ஹெச்.ஐ.வி பாதித்தவர்களுக்கு அன்பும் அக்கறையுமான சிகிச்சையும் கிடைக்கச் செய்தால் வாழ்நாளை நீட்டிக்கலாம் என்றுணர்ந்தார் மனோரமா. அரசுப்பணியை உதறிவிட்டு முழுக்க அந்த மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். நோய்த்தொற்றைச் சுமக்கும் அப்பாவிப் பிள்ளைகளுக்காக திருவள்ளூர் மாவட்டம் பண்டிகாவனூரில் இயங்கும் ‘ஆனந்த இல்லம்’ பலநூறு பேரை இன்றைக்கு நல்வாழ்வுக்குத் திருப்பியிருக்கிறது. இந்த மாண்புமிகு மருத்துவரை பெருமையுடன் அங்கீகரிக்கிறது ஆனந்த விகடன்.