மருத்துவம் வணிகமாகிப்போன காலத்தில் இந்த மூளை நரம்பியல் நிபுணருக்கு அடையாளம், ‘10 ரூபாய் மருத்துவர்.’ 39 வயதில் திடீரென்று நரம்பு நோய் தாக்க, இரண்டு கால்களும் செயலிழந்தன. வாழ்க்கை முடிந்ததென முடங்கிக்கிடந்த ஆறுமுகத்தை ‘நீங்கள் மீண்டு வரணும் டாக்டர்’ என்று மக்கள் உற்சாகப்படுத்த, தட்டுத்தடுமாறி சக்கர நாற்காலியில் அமர்ந்தார் டாக்டர் ஆறுமுகம். எழுச்சியாக மீண்டெழுந்து தன் கிராமத்து மக்களுக்காக சகல வசதிகளோடு ஒரு மருத்துவமனையைக் கட்டியெழுப்பினார். ‘காசு வாங்காத மருத்துவருக்குக் கடன் தரமுடியாது’ என்று வங்கிகள் மறுத்தன. அதற்காகவே 10 ரூபாய் பதிவுக்கட்டணம் என்று தொடங்கியவருக்கு 30 ஆண்டுகளுக்கும் மேலாக அதுவே இயல்பாகிவிட்டது. குமரி மாவட்டம், தலக்குளத்தில் 100 படுக்கைகளோடு விரிந்துகிடக்கும் இவரது மருத்துவமனைக்கு மாநிலம் கடந்தும் மக்கள் வருகிறார்கள். ‘மருத்துவம் என்பது பணம் பார்க்கும் தொழிலல்ல... மகத்தான சேவை’ என்கிற இந்த மனிதநேயரின் வாழ்க்கை, எல்லோரும் படிக்க வேண்டிய பாடம்!