இந்தியப் பெருமையை நிலவில் தரையிறக்கிய பெருமிதத் தமிழர். ‘சந்திரயான்-3’ விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் நான்கு கால்களையும் பதித்த தருணம் முதல் இவரைத் தேடத்தொடங்கியது உலகம். மினி சாட்டிலைட், யூத் சாட், நானோ சாட்டிலைட் என இஸ்ரோவின் பல திட்டங்களை வழிநடத்திய வீரமுத்துவேல், இந்த மிஷனுக்குப் பொறுப்பேற்றது மிகவும் இக்கட்டான தருணத்தில். ‘சந்திரயான்-2’ன் தோல்வி எழுப்பியிருந்த பல கேள்விகளுக்கு ஒரு வெற்றி மூலம் பதில் சொன்னது இவர் தலைமையிலான குழு. வளர்ந்த நாடுகளுக்கே இன்னும் கைவராத நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களோடு தடம் பதித்து ஓடிய பிரக்யான் ரோவர் இந்தியாவுக்கு நெருக்கமாக்கியிருக்கிறது நிலவை. அரசுப்பள்ளியில் படித்த ஒரு ரயில்வே ஊழியரின் மகன், 120 கோடி இந்தியர்களின் கனவை நிறைவேற்றியதற்குப் பின்னால் இருக்கிறது, ஒட்டுமொத்தத் தலைமுறைக்குமான உழைப்பு. சந்திரயான் தந்த தடத்தில், அடுத்து நிலவில் இறங்கவிருக்கிறார்கள் இந்தியர்கள். குவியும் விருதுகள், பாராட்டுகளைப் புன்னகையால் ஏற்றுக்கொண்டு அடுத்த மிஷனுக்கு ஆயத்தமாகியிருக்கும் இந்த விழுப்புரத்துக்காரரை ஆரத்தழுவிப் பாராட்டுகிறது ஆனந்த விகடன்.