‘உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது’ என்ற வழக்குமொழியை மாற்றி விவசாயிகளை லாபக்கணக்கு எழுத வைத்த பொறியாளர். ரசாயனங்களால் வளமிழந்து, மரபணு மாற்றப் பருத்திக்கும் மக்காச்சோளத்துக்கும் இரையான நிலங்களை மீண்டும் சிறுதானியச் சாகுபடிக்கு மாற்றினார். இது தேசத்துக்கே பாடம். தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கியிருந்த பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்தை வெற்றிகரமான விவசாய மையமாக மாற்றியது சரவணனின் ஒருங்கிணைப்பும் உழைப்பும். துவண்டு போயிருந்த விவசாயிகளை இணைத்து இவர் உருவாக்கிய ‘நம்மாழ்வார் இயற்கை சிறுதானிய உழவர் உற்பத்தியாளர் குழு’ இன்று 200 ஏக்கரில் சிறுதானியம் விளைவிக்கிறது. விளைந்த பயிருக்கு விலை வைக்க முடியாதிருந்த விவசாயிகள், இன்று உற்பத்தியை மதிப்புக்கூட்டி விலை நிர்ணயிக்கிறார்கள். மரபறிவு மூலம் மானாவாரி நிலங்களை உயிர்ப்பிக்கிறார்கள். ‘இனி விவசாயத்திலும் லாபம் பார்க்கலாம்’ என்ற நம்பிக்கையை விதைத்ததற்காகவே கொண்டாடலாம் சரவணனை!