‘விதைத்தவர் உறங்கினாலும் விதை உறங்காது’ எனும் விவிலிய வரிக்குச் சாட்சி இந்த அப்துல் ரஹீம். 13 வயதில் விபத்தில் பார்வையைத் தொலைத்த இவரின் தந்தை முகமது அலி ஜின்னா ‘இந்தியன் அசோசியேஷன் ஃபார் பிளைண்ட்ஸ்’ அமைப்பை நிறுவினார். 35 ஆண்டுகளில் பார்வைச்சவால் கொண்ட 40,000 பேரின் வாழ்க்கையில் ஒளியேற்றியிருக்கிறது அந்த அமைப்பு. தந்தை மறைவுக்குப் பிறகு அதை வழிநடத்திய ரஹீம், கூடுதலாக உருவாக்கிய ‘தேங்க் யூ ஃபுட்ஸ்’ நிறுவனம் பல நூறு பார்வைச்சவால் மாற்றுத்திறனாளிகளுக்குப் புது நம்பிக்கை அளித்திருக்கிறது. அவர்களையே ஒரு பிராண்டாக மாற்றி, அவர்கள் தயாரிக்கும் உணவுப்பொருள்களுக்கு பெரும் சந்தையை உருவாக்கியுள்ளார் ரஹீம். பேஸ்புக், கூகுள் நிறுவனங்களின் கேன்டீன் வரை அவற்றை எடுத்துச் சென்று சந்தைப்படுத்துகிறார். ஆறே ஆண்டுகளில் மதுரை கடந்து சென்னை, கோவை நகரங்களில் கிளை பரப்பியதோடு இணையவழியில் இந்தியாவெங்கும் வணிகம் விரித்திருக்கிறது தேங்க் யூ ஃபுட்ஸ். இரக்கத்தையும் கருணையையும் மட்டுமே எதிர்பார்க்காமல் தம் மக்களைத் தொழில் முனைவோராக்கி 100 கோடி இலக்கு வைத்துப் பயணிக்கும் அப்துல் ரஹீமுக்கு ஆயிரமாயிரம் கைத்தட்டல்கள் தந்து கொண்டாடுகிறது ஆனந்த விகடன்.