தடமிழந்த ஒரு நதியை மீட்டு நிலத்தைக் குளிர்வித்த சூழலியல் போராளி. குருடிமலையில் தொடங்கி 50 கி.மீ நிலப்பரப்பை வளப்படுத்திய கௌசிகா நதி, காலப்போக்கில் கழிவுநீர்க் குட்டையானது. பத்தாண்டுகளுக்கு முன்பு செல்வராஜ் உருவாக்கிய ‘கௌசிகா நீர்க்கரங்கள்’ அமைப்பு, ஆக்கிரமிப்பு, கனிமவளச் சுரண்டல் தகர்த்து நதியின் பாதையை மீட்டது. அரசு, மக்கள், தனியார் நிறுவனங்கள் பங்களிப்போடு செல்வராஜ் நடத்திய மீட்பியக்கம், கௌசிகா நதியின் பாதையில் இருந்த 21 நீர்நிலைகளை மீட்டது. நீர் தேங்கும் வகையில் நதியின் போக்கில் 15 தடுப்பணைகளைக் கட்டினார். அதன் கரைகள் நெடுக முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட செடிகளை நட்டுப் பசுமையாக்கினார். உள்ளூர் மக்களுக்கு நதியின் தேவையை உணர்த்தினார். முப்பதாண்டுகளாக வறண்டுகிடந்த ஏரிகள், இந்தப் பசுமை மனிதரால் இப்போது தளும்பி நிற்கின்றன. செப்பனிடப்பட்ட நீர்நிலைகளில் 40 கோடி லிட்டர் தண்ணீர் சேர்ந்திருப்பது கண்கூடு. காலநிலை குலைந்துவரும் இந்த நேரத்தில் நீராதாரங்களை மீட்டுக் காக்கும் இந்தப் பச்சைய மனிதனின் செயலைப் போற்றுகிறது ஆனந்த விகடன்.