பெண்களின் உடல்வாகுக்கும் மனநிலைக்கும் சரிவராது என்று விலக்கப்பட்ட ஒரு பணியில் நிலைத்து சாதித்திருக்கும் முன்னுதாரண மனுஷி. அம்மாவால் தைரியமூட்டி வளர்க்கப்பட்ட இந்த போடிநாயக்கனூர் பெண்ணுக்கு, பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடனே திருமணம் முடிந்தது. அடுத்தடுத்து இரண்டு குழந்தைகளும் பிறக்க, சென்னைக்குக் குடிபெயர்ந்தது குடும்பம். கிடைத்த தருணங்களில் கணவரிடம் கார் ஓட்டக் கற்றுக்கொண்டு கால் டாக்சி ஓட்டினார். கொரோனாவால் தேசம் மிரண்டுகிடந்த தருணத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக விரும்பி விண்ணப்பித்தார். ‘அசுர வேகத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுவதற்குப் பெண்ணா’ எனத் தயங்கியவர்கள், அவரின் துணிச்சலையும் வேகத்தையும் பார்த்து பைலட்டாக அமரவைத்தார்கள். கொரோனாத் தொற்றால் பரிதவித்த நோயாளிகளை பயப்படாமல் சுமக்கத் தொடங்கிய வீரலட்சுமியின் ஆம்புலன்ஸ், இந்த மூன்றாண்டுகளில் பலநூறு உயிர்களை மீட்டிருக்கிறது. ‘பொம்பளைப் புள்ளைக்கு இந்த ஆபத்தான வேலை தேவையா?’ என்ற வழக்கமான அறிவுரைகளை ஒதுக்கிவிட்டு ஆக்ஸிலரேட்டர் மிதிக்கிறார் வீரலட்சுமி. தமிழகத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டும் ஒற்றைப் பெண்ணான வீரலட்சுமியின் கரம்பற்றிப் பாராட்டுகிறது ஆனந்த விகடன்.