ரத்ததானம் வேண்டித் தவறுதலாக எண் மாறி வந்த ஓர் அழைப்புதான் ஸ்ரீவத்ஸாவின் வாழ்க்கைப்பாதையை மாற்றியது. மரண விளிம்பிலிருந்த ஒரு குழந்தைக்கான அந்த அபயக் குரல் மனதை உலுக்க, நண்பர்களோடு சென்று ரத்த தானம் வழங்கிய அந்தக் கணத்தில் தொடங்கியது, இந்தத் தொழிலதிபரின் சேவைப்பயணம். ரத்த தானத்துக்கென 2007-ல் அவர் தொடங்கிவைத்த குழுவில் இன்று நாடெங்கும் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கரம் கோத்திருக்கிறார்கள். புற்றுநோய், டெங்கு போன்ற உயிர்வலி நோய்களுக்கு மருந்தான ரத்தத் தட்டணுக்களை தானம் செய்வதற்காக இவர் உருவாக்கிய டிரஸ்ட் இன்று இந்தியாவெங்கும் கிளை விரித்திருக்கிறது. அரியவகை ரத்தம் கொண்டவர்களைத் தேடிப் பிடித்து, தேவை இருப்போரோடு இணைக்கிறார். இவரது டிரஸ்ட் அளித்த தட்டணு தானத்தால் ஒரு லட்சம் பேருக்கு மேல் உயிர் மீண்டிருக்கிறார்கள். ரத்த தானம், தட்டணு தானத்தின் தேவையையும் மகத்துவத்தையும் அடுத்த தலைமுறைக்குப் பரப்ப தொடர் பயணம் நிகழ்த்துகிறார். இந்த தானத் தலைவனைப் பாராட்டி கௌரவிக்கிறது ஆனந்த விகடன்.