‘சாதி மதம் பார்த்து சண்டை போடுற மனுசங்கதான், இந்த உலகத்திலேயே மோசமானவங்க’ என்பதைப் பொட்டில் அடித்ததுபோல் சொன்னது ‘அயோத்தி’ திரைப்படம். திரைக்குள்ளிருந்து ரத்தம் தெறிக்கும் அளவுக்கு வன்முறை வாடை வீசும் படங்களுக்கு மத்தியில், மனிதர்களிடம் நம்பிக்கையையும் அன்பையும் விதைத்த படம். மொழி, இனம் கடந்து இன்னும் உயிர்த்திருக்கும் மனிதத்தின் உன்னதத்தை உரக்கச் சொல்லி எல்லோர் மனதிலும் இருக்கை போட்டு அமர்ந்தது. ஆணாதிக்கத் தகர்ப்பு, மதவாத எதிர்ப்பு, மனிதாபிமானம் என சமகாலத் தேவைகளை தனது முதல் படத்திலேயே பகிரங்கமாகக் காட்டியிருந்தார் மந்திரமூர்த்தி. திருநெல்வேலியில் பிறந்து, சினிமா வாசனையே இல்லாத நடுத்தரக் குடும்பத்தில் இருந்து முதல் தலைமுறையாய் முளைத்து வந்தவர். தணியாத தாகம், குறையாத வேகம் என தனக்கான சினிமாவைக் கற்று, உயரம் தொட்டவர், இந்த வருட தமிழ் சினிமாவின் அசத்தல் படைப்பாளியாக களம் கண்டிருக்கிறார். அடுத்தடுத்த படைப்புகளில் சாதிக்க அவருக்கு பெருஞ்சவாலும், நமக்கு நல்ல படைப்புகளும் காத்திருக்கின்றன.