வரலாற்றை இசையின் வழி தேடுகிறார் இந்தக் கட்டடவியல் பட்டதாரி. இவர் மீட்டுருவாக்கித் தந்த பெரும் பொக்கிஷம், சங்ககால யாழ். தமிழ்த்தொன்ம இசை, பண் குறித்துத் தீராத் தேடலோடு பயணிக்கும் தருணின் முயற்சிகள் இசையியல் ஆராய்ச்சியில் புதிய திறப்புகளை உருவாக்கியுள்ளன. தொல்காப்பியம் தொடங்கி சிலப்பதிகாரம் வரை பாணர்களின் பாதையில் விடாமல் தேடியலைந்து உருவம் வார்த்து இவர் உருவாக்கியுள்ள 6 யாழ்களும் வரலாற்றையும் மனதையும் மீட்டுகின்றன. அரண்மனைகளிலும் ஆலயங்களிலும் இசைக்கப்பட்ட தொன்மையான பண்களைத் தேடிக் கண்டடைந்து யாழிசைக்கென்றே ஓர் இசைக்குழுவை உருவாக்கி திறனோடு வழிநடத்துகிறார். தருண் தொடங்கியிருக்கும் யாழிசைப்பள்ளி தமிழ்ச் செவ்விசையைக் கற்றுத்தருகிறது. கீழடி அகழாய்வு இந்திய வரலாற்றைத் தெற்குப்பக்கம் திசைதிருப்பியுள்ள நேரத்தில், 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட இசைக்கருவியை உயிர்ப்பித்துக் கொடுத்த இந்த மதுரைக்கார தம்பியை மனதாரப் பாராட்டுகிறது ஆனந்த விகடன்.