750 ரூபாய் சம்பளத்தில் வேலைக்காகவே ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு ரயிலேறினார் மோகன். பதினேழே ஆண்டுகளில் உலகின் பெரு நிறுவனங்கள் எல்லாம் போட்டி போட்டு முதலீடு செய்யுமளவுக்கு ஓர் உலகத்தர நிறுவனத்தைக் கட்டியெழுப்பினார். இந்த சாதனைக்குப் பின் இருப்பது அயராத உழைப்பும் அசத்தலான தொழில்நுட்ப அறிவும். Ippo pay என்ற அவரது பணப் பரிவர்த்தனைச் செயலி, இந்தியாவின் சிறுநகர வியாபாரிகளின் வணிகத்துக்கு மிகப்பெரிய பங்களிப்பு செய்கிறது. இன்று Ippo pay க்யூ.ஆர் கோடைப் பயன்படுத்தும் வர்த்தகர்களின் எண்ணிக்கை 4.5 லட்சம். பணப்பரிமாற்றம் ரூ.15,000 கோடியைத் தாண்டியிருக்கிறது. ஏராளமான தடைகளைத் தாண்டியே மோகனுக்கு இந்த வெற்றி கைகூடியிருக்கிறது. சென்னையில் தொடங்கி, இன்று இந்தியாவின் அத்தனை நகரங்களிலும் வர்த்தகம் செய்கிறது Ippo pay. கூடவே இருந்து உண்மையாக உழைத்த ஊழியர்களுக்கும் நிறுவனத்தில் பங்கு தந்தது மோகனின் பெருமனது. திட்டமிட்ட முயற்சியும் அயராத உழைப்பும் கடைக்கோடி தமிழனையும் மிகப்பெரிய தொழிலதிபராக்கும் என்ற நம்பிக்கையை விதைத்ததற்காக இந்தத் தொழில்நுட்ப இளைஞனை வாழ்த்திப் போற்றுகிறது ஆனந்த விகடன்.