28 வயதேயான ஹரி கடந்து வந்திருப்பது மலர்களே இல்லாத கடும் பாதை. 15 வயதில் அறியாக் குற்றத்துக்காக அரசு சிறப்பு இல்லத்தில் அடைக்கப்பட்ட ஹரிக்கு அந்த உலகம் காட்டிய அனுபவங்கள் எல்லாமே கசப்பானவை. மூன்றாண்டுகளில் அங்கிருந்து மீண்ட ஹரி, இன்று தவறிழைத்து இல்லங்களுக்கு வரும் எல்லாச் சிறுவர்களுக்கும் அன்பு அண்ணனாகி நல்வழி காட்டுகிறார். சிறார் குற்றங்களுக்குப் பெரும்பாலும் பின்னணி போதைதான். அதைப் பழகிய சிறார்களுக்குப் பொறுப்பெடுத்து, மடைமாற்றி மனம் மாற்றி பள்ளி, கல்லூரிகளில் இணைக்கிறார். தமிழகம் முழுவதும் மத்தியச் சிறைகளில் இருக்கும் இளம் சிறைவாசிகளுக்கும் உளவியல் பயிற்சி தந்து தடம் மாற்றுகிறார். அவர்களை நற்பாதையில் திருப்பி குடும்பத்தோடு இணைப்பது, தொழில் வாய்ப்புகளை அமைத்துத் தருவது என இந்தத் திருவண்ணாமலை தம்பியின் சேவைகள் பரிசுத்தமாய் விரிகின்றன. ‘சிறப்பு இல்லங்களைச் சீர்திருத்திவிட்டால் சிறைச்சாலைகள் காலியாகிவிடும்’ என்றுணர்ந்து இயங்கும் ஹரிதாஸுக்கு ஆனந்த விகடனின் நெஞ்சம் நிறைந்த கைகுலுக்கல்கள்!