சுற்றுச்சூழல் சீரழிவா, ஸ்மார்ட் சிட்டி முறைகேடா, நீர்நிலை ஆக்கிரமிப்பா... அத்தனை அநியாயங்களுக்கு எதிராகவும் சட்டப்போராட்டம் நடத்துகிற இந்த வழக்கறிஞர் குழு, கடந்த 7 ஆண்டுகளில் உருவாக்கிய மாற்றங்கள் ஏராளம். மணிபாரதி, வைகை ரத்னா, சகா, பேராசிரியர் புஷ்பவனம், முனீஸ்வரி, அப்துல் ரஹ்மான் ஜலால், சக்கரை முகமது, கதிர் ஆகிய நண்பர்கள் எட்டுப்பேரும் இன்டர்ன்ஷிப் காலத்தில் சேர்ந்தவர்கள். எந்த இடத்திலும் தங்களை வெளிப்படுத்தி வெளிச்சம் தேடாத இந்த இளைஞர்கள், நூற்றுக்கும் மேலான பொதுநல வழக்குகளால் அதிகாரத்தை உலுக்கியிருக்கிறார்கள். பொதுப் பிரச்னைகளில் ஆதங்கப்பட்டு அங்கலாய்க்காமல், அதிகாரத்தைக் கூண்டிலேற்றி நீதி கேட்பதில் இருக்கிறது இவர்களின் மனோதிடம். பாதிக்கப்பட்ட எளிய மக்களிடம் கட்டணம் பெறாமல் வழக்காடி நியாயம் பெற்றுத் தருவதும் இவர்களின் மற்றுமொரு தனித்தன்மை. இவர்களால் பல நீர்நிலைகள் மறுவாழ்வு பெற்றன. பொதுவிட ஆக்கிரமிப்புகள் உடைத்தெறியப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகள் கிடைத்தன. சிறைவாசிகளுக்கு டிஜிட்டல் நூலகம், மாற்றுத்திறனாளிகளுக்கென தனிச்சிறப்பு நீதிமன்றங்கள், மன்னார் வளைகுடாவில் கடற்பசு சரணாலயம் என இவர்கள் சாதித்தவை நிறைய. அறத்தின் அருகில் நின்று தொடர்ந்து இயங்கும் இவர்களுக்கு நம்பிக்கை விருதளித்து வாழ்த்துகிறது ஆனந்த விகடன்.