நோயை மருந்து ஒரு பாதி குணப்படுத்தும் என்றால், மருத்துவரின் வார்த்தைகளே மறு பாதி நிவாரணம் கொடுக்கும். மருத்துவருக்கும் நோயுற்றவருக்கும் உரையாடலே அற்றுப்போன இந்தக் காலத்தில் அன்பும் கனிவும் படர வரவேற்று அமர வைத்துப் பேசுவதற்காகவே டாக்டர் முரளியை நாம் கொண்டாடலாம். தஞ்சாவூரைச் சேர்ந்த முரளி, குடல் நோய் சிகிச்சை நிபுணர். மருத்துவத்தை விற்பனைப் பொருள் ஆக்காமல் அறத்தோடு இயங்கும் மகத்துவர். எளிய மக்களிடம் சிகிச்சைக்கு இவர் எந்தக் கட்டணமும் வாங்குவதில்லை. வரவேற்பறையில் இருக்கும் உண்டியலில் விரும்பிய தொகையைப் போட்டுச் செல்லலாம். இல்லாதவர்கள் போடாமலும் செல்லலாம். எண்டோஸ்கோபி உட்பட எல்லா சோதனைகளுக்கும் குறைவான கட்டணம்தான். அதுவும் தர இயலாதோருக்கு விலக்கு உண்டு. நிதானமாக நேரம் கொடுத்துப் பேசி நோயாளிக்கு நம்பிக்கையளிப்பதால், மக்கள் இவரைக் கடவுளின் மறு உருவாகவே காண்கிறார்கள். இவர் மீட்ட குடிநோயாளிகளின் எண்ணிக்கை ஏராளம். மருத்துவத்தை சேவையென்றே கொள்கை வகுத்து இயங்கும் இவர், ‘அர்ப்பணம்' என்ற அறக்கட்டளையையும் நடத்துகிறார். இந்த மனிதநேய மருத்துவரை அரவணைத்து மகிழ்கிறது ஆனந்த விகடன்.