சிறுமிகள் கண்ணாமூச்சி ஆடும் வயதில், அந்தக் கூட்டத்திலிருந்து விலகி மண்ணைத் தொட்டு முத்தமிட்டுக் கபடி ஆட வந்த ஆவடி கவிதாவுக்கு, இளமைக்காலம் அவ்வளவு இனிமையாக இல்லை. சின்ன வயதிலேயே அம்மாவின் அரவணைப்பை இழந்தவரை, அந்தக் குறை தெரியாமல் வளர்த்தார்கள் தந்தையும் சகோதரிகளும். அதற்குக் கைமாறாக கவிதா பெற்றுக் கொடுத்தது, ஊர் போற்றும் புகழும், உலகம் மெச்சும் பதக்கங்களும். 2000-த்தின் தொடக்கத்தில் தமிழ்நாடு அணிக்குள் வந்த கவிதா, ஆறே ஆண்டுகளில் இந்திய அணிக்குள் நுழைந்தார். அவரின் பரபர வேகமும் ஆல்ரவுண்ட் திறமையும் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பையே பெற்றுக் கொடுத்தது. ஆசியப் போட்டிகள், ஆசிய சாம்பியன்ஷிப், தெற்காசிய சாம்பியன்ஷிப் எனப் பல சர்வதேசத் தொடர்களில் கவிதா தலைமையிலான இந்திய அணி தங்கம் அள்ளிவந்தது. களங்களில் சாதித்து முடித்து, 2012-ல் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றார். அவர் வழிகாட்டுதலில் இன்று தமிழ்நாடு பெண்கள் அணி உச்சத்தை எட்டுகிறது. அதற்குப் பரிசாக இந்திய பெண்கள் அணியின் பயிற்சியாளர் பொறுப்பு தேடி வந்தது. சீனாவில் நடந்த ஆசியப்போட்டியில் தங்கம், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம், இப்போது வங்கதேசத்தில் நடந்த உலகக்கோப்பையிலும் தங்கம் என அடுத்தடுத்து சொல்லியடித்திருக்கிறார். தமிழகத்தின் பெருமைமிகு முகமான கவிதாவுக்கு நம்பிக்கை விருது வழங்கிப் பாராட்டுகிறது ஆனந்த விகடன்.