நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு தோட்டத் தொழிலாளிகளாக கேரளாவுக்குச் சென்ற தமிழர்களின் வாழ்க்கை இன்னும்கூட விடியவில்லை. மலையாளம் படிக்காததால் அரசு வேலைகள் சாத்தியமாகவில்லை. அடர் காட்டுக்குள் புகுந்து புதுப்பாதை போடும் களிற்றைப் போல அவர்களுக்கு ஒரு ராஜபாதையைப் போட்டுத் தந்திருக்கிறார் வண்டிப்பெரியாறு கணேசன். அரசுப்பணிக்கான கோச்சிங் சென்டர் போகுமளவுக்கு வளமோ, வசதியோ இல்லை. தன்னைப்போலவே ஆர்வம் கொண்ட பத்துப் பேரிடம் பணம் வாங்கி பயிற்சிக்குச் சென்ற கணேசன், தான் கற்றதை அவர்களுக்கும் சொல்லித் தந்தார். அவர்கள் அத்தனை பேருமே முதல் முயற்சியிலேயே கேரள அரசு ஊழியரானார்கள். ‘பத்துப் பேருக்கு சாத்தியமானது, நூறு பேருக்கு ஏன் சாத்தியமாகாது’ என்ற தேடலில் தொடங்கியது அவரது அடுத்தகட்டப் பயணம். தோட்டம் தோட்டமாகச் சென்று தமிழ் இளைஞர்களைத் திரட்டித் தேர்வுக்குத் தயார் செய்தார். இன்று பள்ளி தொடங்கி காவல்துறை வரை 700 தமிழர்கள், கேரள அரசு ஊழியர்களாகிய அற்புதம் நிகழ்ந்திருக்கிறது. இப்போது கேரள அரசில் வட்டார வழங்கல் அதிகாரியாகப் பணியாற்றும் கணேசன், இன்றைக்கும் பல நூறு பேருக்கு பயிற்சியளிக்கிறார். ஆண்டாண்டுகளாக ஒட்டியிருந்த அடையாளத்தை மாற்றிப் பலருக்கும் நிறைவாழ்வு பெற்றுத்தந்த இந்த மீட்பனுக்கு 2025-ம் ஆண்டுக்கான நம்பிக்கை மனிதர் விருதளித்துப் பெருமைகொள்கிறது ஆனந்த விகடன்.