இன்றைக்கும் குழந்தைகள்மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளில் பலவும் வெளிச்சத்திற்கு வருவதில்லை. குடும்பத்தினரே அந்தக் கொடுமைகளை மூடிமறைத்துவிடும் அவலம் தொடர்கிறது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களை வெளியே சொல்வது சமூக இழிவாகக் கருதப்பட்ட காலத்தில், ‘அது மூடி மறைக்கப்பட வேண்டிய விஷயமல்ல, நாம் முன்னெடுக்க வேண்டிய தார்மிகப் போராட்டம்' என்பதை உரக்கச் சொன்னது ‘துளிர்' அமைப்பு. கடந்த 22 வருடங்களுக்கும் மேலாக இதற்காக செயலாற்றிவருகிறது இந்த அமைப்பு. பாதிக்கப்படும் குழந்தைகளை அரவணைத்து ஆற்றுப்படுத்துவது, அரணாக இருந்து சட்ட உதவிகள் வழங்குவது, அந்த அதிர்ச்சியிலிருந்து அவர்களை மீட்க உளவியல் சிகிச்சை தருவது, பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் கொள்கை உருவாக்கங்களில் பங்கேற்பது என்று துளிரின் பணிகள் நீள்கின்றன. ஒரு குழந்தையைப் பாதுகாப்பது தனிநபரின் கடமையல்ல, ஒட்டுமொத்தச் சமூகத்தின் பொறுப்பு என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லி அவர்களின் ஒருமித்த குரலாக தேசமெங்கும் ஒலிக்கும் ‘துளிர்' அமைப்பின் நிறுவனர் வித்யா ரெட்டி மற்றும் குழுவினருக்கு நம்பிக்கை மனிதர்கள் விருதளித்துப் போற்றுகிறது ஆனந்த விகடன்.