இந்த நூற்றாண்டின் பெருஞ்சோகம், பழங்குடிகள் மேல் நிகழ்த்தப்பட்ட பண்பாட்டு வன்முறை. இயற்கையோடு இணைந்து வனமே உயிரென வாழ்ந்த பழங்குடிகளை வேரோடு பிடுங்கி வாழ்வாதாரத்தை நசுக்குகின்றன நவீனக் கொள்கைகள். நிலைகுலைந்து நிற்கும் ஆதிக்குடிகளின் உரிமைக்காக இந்தியாவெங்கும் பாதம்தேய நடக்கிறார்கள் தனராஜும் லீலாவதியும். ஒடுக்கப்பட்ட மக்களின் நில உரிமைக்காகவும் சூழலியல் கேடுகளை எதிர்த்தும் களமாடிக்கொண்டிருந்த வழக்கறிஞரோடு, பழங்குடிப் போராளி லீலாவதி மனம் கலக்க, களம் பலமாகிக் கனவுகள் ஒன்றாகின. பழங்குடிகளோடு சேர்ந்து இவர்கள் நடத்தும் அறப்போராட்டங்கள், அதிகாரிகளை மலையேறி ஓடிவரச் செய்கின்றன. அந்த மக்களின் அன்றாட வாழ்வுரிமைக்காக அலுவலகங்களுக்கு அலைவது தொடங்கி, கொத்தடிமைகளாக இருந்து வதைபடும் அப்பாவிகளை மீட்பது வரை அசராது நீள்கிறது இவர்களின் பணி. தங்களைப் பின் நிறுத்தி, பழங்குடி மக்களிலேயே தலைவர்களை உருவாக்கும் பக்குவத்துக்கே இவர்களுக்குச் சூட்டலாம் பல கிரீடங்கள். ஆதிக்குடிகளின் கலை, கல்வி, பண்பாட்டைக் காப்பாற்றுவதற்கான நெடும் பயணத்தில் வரும் இடர்களைப் புன்னகையால் புறந்தள்ளிவிடும் இந்தப் பூர்வகுடிகளின் நேசர்களுக்கு நெஞ்சம் நிறைய வாழ்த்துகள்!