ஒரு காலத்தில் மாதம் 50 ரூபாய் சம்பளத்துக்கு ஒரு கட்டுமான நிறுவனத்தில் உதவியாளராகச் சேர்ந்த இந்த 74 வயது இளைஞர், இன்று 300 பட்டதாரிகளுக்கு சம்பளம் தரும் முதலாளி. எஸ்.எஸ்.எல்.சி-யோடு பள்ளியிலிருந்து துரத்திய வறுமை, குடும்பத்தை வதைத்த பசி என இவரிடம் சொல்ல ஏகப்பட்ட சோகக்கதைகள். ஆனால் தன் வார்த்தைகளால், கேட்போருக்கு நம்பிக்கைச் சிறகு துளிர்க்க வைக்கும் இந்த உச்சிப்புளிக்காரர், இன்று தொட்டிருப்பது ஆண்டுக்கு 120 கோடி பரிவர்த்தனை. இந்தியா கடந்து இலங்கை வரைக்கும் நீண்டிருக்கும் இவரது வணிகத்தின் மூலம் ஏராளமான குடும்பங்கள் சுவாசிக்கின்றன. தன் சிறு வயது வலிகளை மறக்காத இந்த நற்குணக்காரரை, இன்றைக்கும் தன் வருவாயின் பெரும்பகுதியை கல்விக்காகவும் மருத்துவத்துக்காகவும் அள்ளித்தரும் குணத்துக்காகவே கொண்டாடலாம். இளம் தலைமுறைக்கு நம்பிக்கையும், உதவிகோரும் மக்களுக்கு நேசமும் காட்டும் இந்த மாமனிதரை மனமுவந்து பாராட்டுகிறது ஆனந்த விகடன்.