ஓர் அரசு அதிகாரி மனம் வைத்தால் மக்களின் வாழ்க்கை மாறும் என்பதற்கு வெங்கடேஷ் நல்லுதாரணம். இடைத் தரகர்களின் கரங்களுக்குள் சிக்கிக்கொண்டிருந்த வேளாண் வணிகத்தை மீட்டு தொழில்நுட்பத்தின் வழியே விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் நேர்ப்பாதை போட்டு நெறிப்படுத்தியதில் இருக்கிறது இவரின் துணிச்சல். தானியங்களைச் சுமந்துகொண்டு கடைகடையாக ஏறிக்கொண்டிருந்த விவசாயிகளை வயற்காட்டிலேயே அமர்ந்து விலை சொல்லி விற்பவர்களாக மாற்றியதற்காகவே பாராட்டலாம் இந்த வாடிப்பட்டிக்காரரை. 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரவமின்றி இயங்கிய திருமங்கலம் விற்பனைக்கூடத்தை, கண்காணிப்பாளர் பொறுப்பேற்ற இரண்டாண்டுகளில் வியாபாரிகள் அலைமோதும் சந்தைக்கூடமாக மாற்றியது பெரும் சாதனை. மரபில் ஊறிய விவசாயிகளை நவீன வணிகத்துக்குத் தயார்படுத்த வெங்கடேஷ் மேற்கொண்ட களப்பயணமே தனியாக எழுதவேண்டிய சாகசக்கதை. சமூக ஊடகங்களின் வழி விவசாயத்தின் தலையெழுத்தையும் மாற்றலாம் என்று நிரூபித்திருக்கும் வெங்கடேஷ், தேசிய மின்னணு வேளாண் சந்தையில் திருமங்கலம் விற்பனைக் கூடத்தையும் இணைத்து சந்தையை விரிவுபடுத்தியது சாதாரண விஷயமில்லை. ஆண்டுக்கு 2 லட்சமே என்றிருந்த வர்த்தகத்தை 20 கோடியையும் தாண்டவைத்த இந்த அக்கறை அதிகாரியை ஆரத்தழுவிப் பாராட்டுகிறது ஆனந்த விகடன்.