கனவுகளையே சிறகாக்கி வலம்வரும் சாதனைத் தமிழன். கருடா ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்தின் நிறுவனரான இவர் உருவாக்கிய டிரோன்கள் இன்று உலகெங்கும் வளி மண்டலங்களில் வெற்றிகரமாக வலம் வந்துகொண்டிருக்கின்றன. சிங்கப்பூரில் மிதக்கும் சோலார் பேனல்களைச் சுத்திகரிப்பதில் தொடங்கி, கொரோனா காலத்தில் பொது இடங்களில் கிருமிநாசினி தெளித்தது வரை அக்னீஷ்வரின் ஆளில்லா விமானங்கள் சுற்றிச் சுழன்ற வெற்றிக் கதைகள் சிலிர்ப்பூட்டுபவை. இன்று விவசாயிகளுக்கு உதவியாக இந்தியாவின் நவீன வேளாண் திட்டங்களிலும் நுழைந்துவிட்டது கருடா ஏரோ ஸ்பேஸ். அதன் முக்கியப் பங்களிப்பாக, ஐந்நூறுக்கும் மேற்பட்ட கிராமப்புறப் பெண்களின் கைகளில் டிரோன் கன்ட்ரோலர்களை வழங்கி, பைலட் ஆக்கியிருக்கிறார் அக்னீஷ்வர். சர்வதேச அளவில் 26க்கும் மேற்பட்ட நகரங்களில் பரந்து விரிந்திருக்கும் இந்த நம்பிக்கை இளைஞனின் கனவுப்பயணம், தமிழ்நாட்டை சர்வதேச டிரோன் சந்தைக்கான தளமாக மாற்றும். நண்பரே, வெல்லுங்கள்!