அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த ஆறாவது உலகக்கோப்பை கேரம் போட்டியில் காஜிமா சுண்டியடித்த ஸ்ட்ரைக்கர் இந்தியாவுக்கு மூன்று தங்கங்களை அள்ளித் தந்தது. ஏழ்மையின் திண்ணையில் வளர்ந்தாலும் காஜிமா கண்களில் சாதனைக் கனவு. ஆட்டோக்காரரான அப்பா மாபு பாட்ஷா, சொற்ப வருமானத்தில் மகளின் வாய்ப்புகளுக்காக விடாது பாதை அமைத்தார். அப்பாவே பயிற்சியாளராக வந்ததில் ஐயம் திரிபறப் பயின்றார் காஜிமா. காசிமேட்டில் அனல் இறங்கும் ஆஸ்பெஸ்டாஸ் கூரையின் கீழிருந்து சுண்டாட்டக் கலை பயின்ற காஜிமா இப்போது பெற்ற வெற்றி, தமிழ் விளையாட்டுப் பெண்களுக்கான நிஜமான முன்னுதாரணம். இந்த வெற்றித் தமிழ்மகளின் சாதனையைக் கொண்டாட, தமிழக அரசு அவருக்கு ரூ. 1 கோடியை அன்பளித்து அரவணைத்துக் கொண்டது. இதற்கான காஜிமாவின் உழைப்பு, இரவு பகல் அறியாதது. அடுத்தடுத்த இலக்குகள் நோக்கி ஆக்ரோஷமான பயிற்சியில் இருக்கிறார் காஜிமா. வர்லாம் வர்லாம் வா காஜிமா!