-
பிசினஸ் மென்ட்டார் அவார்ட்
சி.கே.ரங்கநாதன்,
சேர்மன் & மேனேஜிங் டைரக்டர்,
கவின்கேர் பிரைவேட் லிமிட்டெட்
'மாதா, பிதா, குரு' என்ற வரிசையில் தனிப்பட்ட வாழ்க்கையில் வேண்டுமானால் இந்தப் பட்டியலில் குருவுக்குக் கடைசி இடம் இருக்கலாம். ஆனால் உயர்வது ஒன்றையே குறிக்கோளாய்க் கொண்ட, வானத்தை வென்று வசப்படுத்திவிடலாம் என்று வர்த்தகக் கனவுகளைச் சுமந்தவர்களின் வாழ்க்கையில் குருவுக்கு எப்போதுமே முதலிடம்தான். சவால்களைச் சந்திப்பதற்கும் குறிக்கோளை அடையும் வழிகளைச் சிந்திப்பதற்கும் வியாபாரத்தில் ஆசான்கள் அவசியம். அப்படித் திறமையாளர்களுக்கான தெருவிளக்காய், நம்பிக்கை கொண்டவர்களுக்கான நட்சத்திரமாய், முன்னேறத் துடிப்பவர்களுக்கான முன்னோடியாய் விளங்குபவர் கவின்கேர் பிரைவேட் லிமிடெட் சேர்மன் & மேனேஜிங் டைரக்டர திரு.சி.கே.ரங்கநாதன்.
ஆங்கிலத்தில் மெனட்டார் என்று அழைக்கப்படுவதன் தமிழ் அர்த்தம் என்னவென்று கேட்டால் தாராளமாய் சி.கே.ரங்கநாதன் அவர்களைக் கைகாட்டலாம். பல இளம் தொழிலதிபர்களுக்கும் தொழில்முனைவோர்களுக்கும் ஒரு தந்தையின் கரிசனத்தோடும் நண்பனின் அளவிட முடியாத அக்கறையோடும் ஆசிரியரின் முதிர்ச்சியோடும் ஆலோசனைகளை வழங்குபவர் இவர்.
பிசினஸ் என்பது எப்போதும் பெட்டியும் அதிலிருக்கும் பணமும் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமில்லை, புத்தியும் உத்தியும் இணைந்தே வியாபாரத்தை வெற்றிகரமானதாக்குகிறது. எல்லாப் பொருள்களும் பொட்டலம் கட்டி விற்கப்பட்டு வந்த காலத்தில், சாஷே என்னும் புதிய வணிக உத்தியை அறிமுகப்படுத்தி, வளர்ச்சியின் சிகரத்தில் ஏறிய சின்னி கிருஷ்ணனின் மகன் சி.கே.ரங்கநாதன்.
'தவறுகளைவிடவும் சரியான ஆசான் இருக்கமுடியாது' என்பதைத் தன் வேதமாகக் கொண்டவர். தவறுகளில் இருந்து பாடம் படித்து, அதையே வெற்றிக்கான வேதமாக்கியவர் இவர். பிசினஸ் தொடர்பாக தனக்கு வரும் கேள்விகளுக்கான விடையைத் தெரிந்துகொள்ள நிறைய படித்தார்; மேலாண்மைத் துறை பேராசிரியர்களைச் சந்தித்துப் பேசினார். அதன் விளைவு, இன்றைக்கு கவின்கேர் என்கிற மிகப் பெரிய எஃப்.எம்.சி.ஜி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
வலி என்பது பிரசவிக்கும் தாய்க்கு இருக்கலாம். ஆனால் பெற்ற குழந்தைகளுக்கு இருக்கக்கூடாது என்ற தாயின் கரிசனத்தோடு, தான் பட்ட கஷ்டங்களை இன்றைய இளம் தலைமுறை அனுபவிக்கக்கூடாது என்ற அக்கறையோடு, தன் அனுபவத்தின் அடிப்படையில் பல ஆலோசனைகளை வழங்கிவருகிறார். . முதல் தலைமுறை தொழில்முனைவோர்கள், சிறு,குறு மற்றும் நடுத்தரத் தொழில்களை செய்பவர்கள், எம்.பி.ஏ படிக்கும் கல்லூரி மாணவர்கள் பிசினஸ் தொடர்பாக பலருக்கும் ஏற்படுகிற சந்தேகங்களுக்கான பதிலைப் பொறுமையாகவும் திறமையாகவும் விளக்குவதில் வித்தகர் திரு.சி.கே.ரங்கநாதன்.
கோடிக்கணக்கில் தொழில்முனைவோர்கள் உருவாகவேண்டும் என்றால் அவர்களுக்கு ஆசான்கள் அவசியம், வழிகாட்டிகள் அத்தியாவசியம். அப்படியான வர்த்தக வழிகாட்டியாக, அனுபவமிக்க ஆசானாகத் திகழும் சி.கே.ரங்கநாதனுக்கு பிசினஸ் மென்ட்டார் அவார்ட் அளிப்பதில் பெருமை கொள்கிறது நாணயம் விகடன்!