-
ரைசிங் ஸ்டார் அவார்ட்
பி.என்.வாசுதேவன்,
மேனேஜிங் டைரக்டர் & சி.இ.ஓ.,
ஈக்விட்டாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்
விருட்சங்களின் சூட்சுமம் விதைகள்தான். வளர்ந்துவரும் தொழிலதிபர்கள், தேசத்தையும் வளர்க்கிறார்கள், தங்கள் வர்த்தகத்தையும் வளர்க்கிறார்கள். அப்படியான மனிதர்களில் நம்பிக்கை மின்னும் தொழிலதிபர் ஈக்விட்டாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் மேனேஜிங் டைரக்டர் & சி.இ.ஓ திரு.பி.என்.வாசுதேவன்.
நடுத்தர வர்க்கத்துக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர்தான் வாசுதேவன். அப்பா, சமஸ்கிருத ஆசிரியர். கல்லூரியில் படித்து முடித்தபின் கம்பெனி செகரட்டரிஷிப் படித்தார். படிக்கிறபோதே சோழ மண்டலம் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் பயிற்சிக்குச் சேர்ந்தார். பிறகு அங்கேயே வேலைக்கும் சேர்ந்து பணிபுரிந்தார்.
சில ஆண்டுகள் கழிந்தபின், வாகனங்களுக்குக் கடன் தரும் பிரிவின் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். 2005-ல் அந்த நிறுவனத்திலிருந்து வேலையை விட்டு விலகினார். அடுத்த வேலையைத் தேடிப் புறப்பட்டவருக்கு மும்பையில்தான் வேலையில் கிடைத்தது. அப்போது அவரது மகளுக்கு மூன்று வயது. மும்பையின் சுற்றுச்சூழல் அந்தக் குழந்தைக்கு ஒப்புக்கொள்ளவில்லை. எனவே, அந்த வேலையை விட்டுவிட்டு, சென்னைக்குத் திரும்பினார். சென்னையில் வேலை தேடிக் கொண்டிருந்தபோதுதான் மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனம் தொடங்கி நடத்தும் எண்ணம் முளைத்தது. சமூகத்தின் கடைக்கோடி மக்களுக்குக் கடன் வழங்கி உதவ வேண்டும் என்கிற நோக்கத்தில் உருவானதுதான் ஈக்விட்டாஸ் மைக்ரோஃபைனான்ஸ். வறியவர்களுக்கு கடன் வழங்குவதில் நியாயமாகவும், வெளிப்படையாகவும் இருக்க வேண்டும் என்கிற அர்த்தத்தில் தனது நிறுவனத்துக்கு ஈக்விட்டாஸ் என்று பெயரிட்டார்.
ஈக்விட்டாஸ் நிறுவனத்தின் மூலம் பல்வேறு நகரங்களில் உள்ள அடித்தட்டு மக்களுக்குக் கடன் வழங்கி உதவினார். இவரது இந்த நிதிச் சேவையின் மூலம் பலரும் சிறிய அளவில் கடன் பெற்று தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொண்டதுடன், சிறிய அளவில் தொழிலைத் தொடங்கி நடத்தி, வெற்றியும் பெற்றுள்ளனர்.
வெறும் மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனமாக இருந்ததை ஏழைகளுக்கு உதவுகிற வகையில் ஈக்விட்டாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் என்கிற பெயரில் விஸ்வரூபம் எடுக்க வைத்தார் வாசுதேவன். இந்த வங்கிக்கு நாடு முழுக்க 412 கிளைகள் உள்ளன. ஈக்விட்டாஸ் ஹோல்டிங் நிறுவனத்தின் ஐ.பி.ஒ. கடந்த 2016-ம் ஆண்டு வெளியாகி, மிகப் பெரிய வரவேற்பினைப் பெற்றது.
சில நூறு ஊழியர்களுடன் ஆரம்பித்த ஈக்விட்டாஸ் நிறுவனத்தில் இன்று சுமார் 8,000 பேர் வேலை பார்க்கிறார்கள். சில கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் இன்றைய பங்குச் சந்தை மதிப்பு சுமார் 4,675 கோடி ரூபாய்க்கும் அதிகம் என்றால் ஆச்சர்யம்தானே! சிறிய அளவில் ஆரம்பித்த இந்த நிறுவனமானது, நிதித் துறையில் வளர்ந்துவரும் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாக ஜொலிக்கிறது. அடுத்த சில ஆண்டுகளில் இந்த நிறுவனத்தின் வளர்ச்சி மிகப் பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்கப்படுகிறது. எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக ஈக்விட்டாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் நிறுவனத்தின் வெற்றிக்குக் காரணமாக இருக்கும் பி.என்.வாசுதேவனுக்கு ரைசிங் ஸ்டார் அவார்ட் அளிப்பதில் பெருமை கொள்கிறது நாணயம் விகடன்.