-
கோல்டன் ஃபீனிக்ஸ் அவார்ட்
சி.சி. பார்த்திபன்,
சேர்மன்
கேப்லின்பாய்ண்ட் லேப்
விழுவது வீழ்ச்சியல்ல; விழுந்தும் எழாமலே கிடப்பதே வீழ்ச்சி. மண்ணில் விழும் மழைத்துளி, கடலில் அலையாய் எழுந்து கர்ஜிக்கிறது. விதையும் மண்ணில் விழுகிறது. ஆனால் விருட்சமாய் வளர்ந்து தழைக்கிறது. அப்படிப் பல பின்னடைவுகளைச் சந்தித்தபோதும், தடைகளைத் தகர்த்து வெற்றிப்படிக்கட்டுகளை உருவாக்கிக்கொண்டவர்களுக்கான விருதுதான் கோல்டன் ஃபீனிக்ஸ் விருது. அதைப் பெறுவதற்குத் தகுதியுள்ளவர் கேப்லின்பாயிண்ட் லேபாரட்டரீஸ் லிமிடெட் சேர்மன் திரு சி.சி.பார்த்திபன.
இவரது வாழ்க்கை ஹாலிவுட் ஆக்ஷன் படங்களுக்கு நிகராகப் பல சாகசங்களையும் சவால்களையும் கொண்டது. கும்மிடிப்பூண்டிக்கு அருகில் உள்ள பூவலம்பேடு என்கிற சிறிய கிராமத்தில் பிறந்தவர் பார்த்திபன். கல்லூரி முடித்துவிட்டு, சென்னைக்கு வேலை தேடி வந்தார். மெடிக்கல் ரெப்ரஷன்டேட்டிவ் வேலை கிடைத்தது. மார்க்கெட்டிங் என்றாலே அலைச்சல்தானே. அப்படித்தான் பார்த்திபனும் தொழில்நிமித்தம், இந்தியா முழுக்க அலைந்து திரிந்தார். வாழ்க்கை என்பது பெரிய அளவில் பிரச்னைகளும் இல்லாமல், வளர்ச்சியும் இல்லாமல் சராசரியாய்த்தான் நகர்ந்துகொண்டது. திருமணமாகி தனது மகன் நோய்வாய்பட்டபோதுதான் பணம் சேர்க்க வேண்டியதன் அவசியத்தைப் புரிந்துகொண்டார் பார்த்திபன். அப்போதுதான் வியாபாரத்தில் கால் வைக்கலாமே என்ற எண்ணம் முளைத்தது அவருக்கு. வெறுமனே ஐயாயிரம் ரூபாய் முதலீட்டில் புரோட்டீன் டானிக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார்.
கேப்லின்பாய்ன்ட் என்கிற பெயரில் இவர் ஆரம்பித்த நிறுவனம் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு வந்தபோது அதன் வர்த்தகமுகமே மாறிப்போனது. பெரியளவில் வெற்றிகள் பார்த்திபனைத் தேடிவந்தன. ஆனால் தண்ணீர் பாய்வதற்கே மேடு, பள்ளம் தவிர்க்கமுடியாத தேவையாக இருக்கும்போது, வாழ்க்கையில் மட்டும் மேடு, பள்ளம் வந்துபோகாமலா இருக்கும்? மருந்து தயாரிக்கும்போது ஏற்பட்ட சிறு தவறினால், மொத்த நிறுவனத்தையே மூடும் நிலை . பத்து கோடி ரூபாய் நஷ்டம், 27 செக் பவுன்ஸ் வழக்கு என்று நெருக்கடிகள் நெறித்தன பார்த்திபனை . எங்கிருந்து வாழ்க்கையை ஆரம்பித்தாரோ, அதே இடத்துக்கே அவரை வாழ்க்கை வலுக்கட்டாயமாய் அழைத்துவந்தது. ஆனால் 'வீழ்வேன் என்று நினைத்தாயோ' என்ற பாரதியின் வரிகளைப்போல், ஒரு தீ பற்றிக்கொண்டது பார்த்திபனிடம். 'சாதித்துக்காட்ட வேண்டும்' என்ற வைராக்கியமே, அவருக்கு சத்துடானிக் ஆனது.
யாருமே போகத் தயங்கும் ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்குப் போனார். அங்கே ஒரு சிறிய ஹோட்டலை வாங்கி நடத்தினார். அங்கு சாப்பிட வந்த ஒரு மெடிக்கல் ரெப்ரசன்டேட்டிவைப் பிடித்து, மருந்துகளை விற்கத் தொடங்கினார். கிடைத்த சொற்ப லாபத்தை வைத்து மீண்டும் கேப்லின்பாய்ன்ட்டை நடத்த ஆரம்பித்தார். ஆப்பிரிக்காவில் தன் தலைமீது குறிவைக்கப்பட்ட துப்பாக்கியிலிருந்து தப்பித்தது, கெளதமாலாவில் மருந்து விநியோகம் செய்தபோது மீண்டும் பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டது என பார்த்திபன் சந்தித்த சிக்கல்களும் அடைந்த அபாயங்களும் கொஞ்சநஞ்சமல்ல. ஆனால் அத்தனையையும் மீறி, அவர் தமக்கான பாதையை உருவாக்கிக்கொண்டார். இப்போது நாணயம் விகடனின் கோல்டன் ஃபீனிக்ஸ் விருது பெறும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார் என்றால் இதைவிடவும் என்ன எடுத்துக்காட்டு இருந்துவிட முடியும்?
சாதித்துக்காட்டிய, இந்த சாம்பல் பறவைக்கு 'கோல்டன் ஃபீனிக்ஸ் அவார்ட்' அளிப்பதில் பெருமை கொள்கிறது நாணயம் விகடன்.