-
செல்ப் மேட் ஆந்த்ரபிரினர் அவார்ட்
கே.பி.ராமசாமி,
சேர்மன்
கே.பி.ஆர் மில் லிமிடெட்
சாதாரணப் பின்னணியில் பிறந்து, சாதனைப் படிக்கட்டுகளில் ஏறமுடியும் என்பதற்கான எடுத்துக்காட்டு, 'வெறுங்கை என்பது மூடத்தனம் - விரல்கள் பத்தும் மூலதனம்' என்ற அழகான கவிதை வரிகளுக்கு அழுத்தமான சாட்சி, முயற்சியும் பயிற்சியும் இருந்தால் வானம் வளைந்து வணக்கம் சொல்லும் என்பதற்கான வாழ்க்கையின் நிரூபணம் - கே.பி.ஆர். மில் லிமிடெட்டின் சேர்மன் திரு கே.பி.ராமசாமி. கோவை, பெருந்துறைக்கு அருகில் கள்ளியம்புதூர் என்கிற குக்கிராமத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் மூத்த மகனாகப் பிறந்தவர் கே.பி.ராமசாமி. பத்தாம் வகுப்பு படிக்கும்போதே அவரை விவசாயத்தில் ஈடுபடுத்த ஆர்வம் காட்டினார், அவரது அப்பா பழனிச்சாமிக் கவுண்டர்.
விவசாயத்தில் சிலகாலம் ஈடுபட்டாலும், அது அவர் விருப்பத்துக்குரிய தொழிலாக இல்லை. 'இன்னும் இன்னும் உயரத்துக்குப் போகவேண்டும்' என்ற எண்ணம் கொண்டவரின் கண்களில் பட்டது பவர்லூம் தொழில். 1971-ல் உறவினரிடமிருந்து கடனாக வாங்கிய எட்டாயிரம் ரூபாய்தான் முதல் முதலீடு. உழைப்பு, உழைப்பு, உழைப்பு மூன்று வேளைகளுக்கும் இதுவே என்று முடிவு செய்தார். பவர்லூம் பிசினஸில் வெற்றி கண்டார். அடுத்து திருப்பூரில் ஜவுளி ஏற்றுமதித் தொழிலில் இறங்கினார். அதிலும் வெற்றி . அடுத்து என்ன செயல்லாம் என்று யோசித்தபோது, மில் தொடங்கும் எண்ணம் அவருக்கு வந்தது.
1995-ல் சத்தியமங்கலத்தில் ஆறாயிரம் ஸ்பிண்டில்களுடன் தன்னுடைய முதலாவது மில்லினைத் தொடங்கினார் கே.பி.ராமசாமி. தொழிலாளர்களை தங்களுடைய வளாகத்திலேயே தங்க வைத்து வேலை செய்ய வைப்பதன் மூலம் தனது நிறுவனத்தை தொடர்ந்து முன்னேற்றினார். 2001-ல் கருமத்தம்பட்டியிலும், 2003-ல் நீலாம்பூரிலும், 2005-ல் அரசரூரிலும் என்று அடுத்தடுத்த மில்கள் பெருக ஆரம்பித்தன.
இவரது அயராத உழைப்பையும், நிர்வாகத் திறமையையும் பார்த்த வெளிநாட்டு பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்கள், கே.பி.ஆர். மில்லினை மிகச் சிறந்த நிறுவனமாகக் கொண்டுவருவார் என்பதை உணர்ந்து, அவரது நிறுவனத்தில் முதலீடு செய்தன. வெளிநாட்டு முதலீடா, வேண்டவே வேண்டாம் எனப் பலரும் அஞ்சும் காலத்தில் அவர் எடுத்த இந்த முடிவு திரு. கே.பி.ராமசாமியின் துணிச்சலுக்கும் தொலைநோக்குக்குமான சான்றுகள்.
உழைப்புக்கும் உயர்வுக்கும் உதாரண மனிதராய்த் தெரியும் திரு. கே.பி.ராமசாமிக்கு 'செல்ப் மேட் ஆந்த்ரபிரினர் அவார்ட்' அளிப்பதில் பெருமை கொள்கிறது நாணயம் விகடன்.